
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் நாளை மறுநாள் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் கடந்தவாரம் அத்துமீறி நுழைந்த இருவர் புகை உமிழும் கருவியை வெடிக்க செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், அவை நடவடிக்கைகளின்போது நாடாளுமன்ற தாக்குதல்குறித்து விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கொத்துக்கொத்தாகக் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, மக்களவையில் 95 உறுப்பினர்களும், ராஜ்யசபாவில் 46 உறுப்பினர்களும் என இதுவரை மொத்தம் 141 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் நாளை மறுநாள் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் எனக் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில், எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டிக்கும் விதமாக நாடு முழுவதும் வரும் 22ஆம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்ததால் எதிர்க்கட்சிகள் கலக்கத்தில் இருக்கின்றன. இந்த விரக்தியில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சீர்குலைத்து முடக்கி வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


