
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீக்கம் ஜனநாயகப் படுகொலை.
தற்போது நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸார் உட்பட 142 பேரை நீக்கியுள்ளது தொடர்பாக சோனியா காந்தி அது ஒரு ஜனநாயகப் படுகொலை, அராஜகமான செயல் பாஜகவின் இச் செயல் கண்டிக்கத்தக்கது என்று கடுமையாக சாடியுள்ளார். அரசாங்கத்தின் சர்வாதிகார நடவடிக்கை குறித்து விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் பெண்களுக்கான இட ஒதுக்கிடு வெறும் கண் துடைப்பு என்றும் நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்த கேள்வி கேட்க உரிமை மறுக்கப்பட்டு அடக்குமுறை கையாளப்படுகிறது. சர்வாதிகாரத்தின் உச்சகட்டம் இது. அநீதியை எதிர்ப்பவர்களுக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி மறுக்கப்படுவது சட்டத்திற்கும் புறம்பானது என்று தெரிவித்துள்ளார்.
சென்ற வாரம் நடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தின்போது கடந்த 13-ம் தேதி அவை நடவடிக்கைகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது, நாடாளுமன்றத்தின் மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 இளைஞர்கள் எம்.பி.க்கள் இருக்கை பகுதிக்குள் குதித்தனர். மேலும், தாங்கள் வைத்திருந்த வண்ணப்புகை குண்டுகளை மக்களவைக்குள் வீசினர். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடனடியாக நாடாளுமன்றத்தில் இருந்த எம்.பி.க்கள் அந்த இளைஞர்களை பிடித்து அவை காவலர்களிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து, அந்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் இதுவரை 6 பேரை கைது செய்துள்ளனர். இதையடுத்து அவை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றன.
இதனிடையே, நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக இரு அவைகளிலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 142 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து அவை நடவடிக்கைகளை புறக்கணித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி கூட்டம் நடைபெறுகிறது. மேலும் எம்பிக்கள் நீக்கம் குறித்தும் சோனியா காந்தி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் அண்மையில் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றிக்கு வித்திட்ட அனைத்து தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்தார். தோல்வியடைந்த இரு மாநிலங்களில் காரணங்கள் கண்டறிந்து மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கட்சியை மல்லிகார்ஜுன கார்கே நல்ல முறையில் வழி நடத்தி செல்வார் என்றும் கூறியுள்ளார்.



