IND vs ENG 5th Test: ரோகித், கில் அபார சதம்.. முன்னிலை பெற்ற இந்தியா!

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

தர்மசாலா: இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 218 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களே வீழ்த்தி அசத்தினர்.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாகத் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி 79 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் குல்தீப் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாளில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 135 ரன்கள் அடித்து இருந்தது. கேப்டன் ரோகித் 52 ரன்களுடனும், கில் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து விளையாடிய ரோகித் – கில் சிறப்பாகப் பேட்டிங் செய்து இந்திய அணியை முன்னிலை பெற வைத்தனர். அபாரமாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் சதமடித்து அசத்தினார். ரோகித் சதமடித்த சிறிது நேரத்திலேயே கில்லும் சதமடித்தார்.

இவர்களின் சிறப்பான பார்ட்னர்ஷிப்பால் இந்திய அணி தற்போது வரை 44 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதுவரை 1 விக்கெட்டுகள் மட்டுமே இழந்திருப்பதால் இந்திய அணி இந்தப் போட்டியில் வலுவான நிலையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *