
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். முற்றிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நிலச்சரிவுகள், திடீர் வெள்ளம், சாலை பள்ளங்கள் மற்றும் விரிவான உள்கட்டமைப்பு சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, செப்டம்பர் மாத மழைப்பொழிவு, இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்று ஐஎம்டி கணித்துள்ளது. மேலும், அடுத்த இரண்டு மாதங்களில் நீண்ட கால சராசரியின் 109%ஐ விட அதிக மழைப்பொழிவு நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தவிர, அடுத்த இரண்டு வாரங்களுக்கு வட இந்தியா, மத்திய இந்தியா மற்றும் கங்கைச் சமவெளிப் பகுதிகளில் பரவலான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வடகிழக்கு, கிழக்கு மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் வழக்கத்தைவிட குறைவாக மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
இந்த அதிக மழைப்பொழிவு விவசாயத்திற்கும் நீர் ஆதாரங்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும் என்றாலும், வெள்ளம், நிலச்சரிவு போன்ற இடர்பாடுகளும் ஏற்பட வாய்ப்புள்ளன.
எனவே, பொதுமக்கள் மற்றும் அதிகார அமைப்புகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த 4-5 ஆண்டுகளாக செப்டம்பர் மாத மழைப்பொழிவு அதிகரித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.



