
பாலைவனச் சோலை வெகுதொலைவில் இல்லை…
உன்னைச் சுற்றியுள்ள அனைத்தும் வெறுமையாகவும், காலியாகவும், பாழடைந்ததாகவும் இருப்பதைப் போல உணரக்கூடிய, வறண்ட பூமியின் நிலத்தின் வழியாக நடப்பதுபோல் நீ எப்போதாவது உணர்ந்திருக்கிறாயா? இந்த வறண்ட பாலைவனம் போன்ற காலத்தை ஆண்டவர் உனக்கு அனுமதிப்பாரானால் நீ என்ன செய்வாய்? இயேசுவே பரிசுத்த ஆவியானவரால் வனாந்தரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். (வேதாகமத்தில் லூக்கா 4:1ஐப் பார்க்கவும்)
இந்த உண்மையைப் புரிந்துகொள்… நீ பாலைவனத்தில் மரித்துப்போவதற்காக அல்ல, மாறாக, ஆண்டவரால் பயிற்சி பெறுவதற்காக வழிநடத்தப்படுகிறாய். இயேசுவைப் போலவே, நீ பிதாவுடன் உன் உறவை வளர்த்துக்கொள்ளும்படிக்கும் ஒவ்வொரு நாளும் அவருடைய சாயலாக மாறும்படிக்கும், இப்படிப்பட்ட இடத்திற்கும், இப்படிப்பட்ட காலகட்டத்திற்குள்ளும் நீ அழைத்துச் செல்லப்படுகிறாய்.
இந்தக் குறிப்பிட்ட காலங்களில், இயேசு உன்னைத் தேசங்களுக்கு மத்தியில் ஒரு அதிசயமாகவும், உன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஆதரவாகவும், உன் அன்றாட வாழ்வில் ஆண்டவரின் கிருபைக்கும் வல்லமைக்கும் ஒரு ஜீவனுள்ள சாட்சியாகவும் மாறும்படிக்கு, தம்முடைய குணாதிசயங்களையும் திறமைகளையும் உன்மீது “எழுதிப் பதிய” வைக்கிறார். நண்பனே/தோழியே, விடாமுயற்சியுடன் இரு … பாலைவனச் சோலை வெகுதொலைவில் இல்லை!
இந்த ஜெபத்தை என்னுடன் சேர்ந்து ஏறெடுக்கும்படி உன்னை அழைக்கிறேன்… “பிதாவே, நான் இந்தப் பாலைவனத்தில் நடக்கும்போது, இந்தச் சூழ்நிலையை உமது கண்களால் பார்க்க எனக்குக் கிருபை தருவீராக. நம்பிக்கையின்மை என் கதவைத் தட்டினாலும், என்னை உமக்கு அருகில் இழுத்துக்கொள்வீராக, உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொள்ள எனக்கு வலிமை தாரும்.
உம் ஒருவருக்கே நான் சகல மகிமையையும் தருகிறேன்… என் வாழ்வில் நீர் நற்கிரியைகளை செய்யத் தொடங்கியிருக்கிறீர், உம்முடைய மிகுதியான அன்பினால் அதைச் சிறப்புடன் செய்து முடிப்பீர். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”
—



