இன்று முதல் கனமழை – வானிலை மையம் தகவல்!

புதுடில்லி:

வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறுவதில் தொடர்ந்து தாமதம் நீடிக்கிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் நிலவுகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறுவதில் தொடர்ந்து தாமதம் நீடிக்கிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற மேலும் 24 மணி நேரம் எடுத்துகொள்ளும். இதையடுத்து, தமிழகம் மற்றும் இலங்கை கரையை நெருங்கலாம்.

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான மஞ்சள் ‘அலெர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் மேகமூட்டமாகக் காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *