
தென்மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த மழையால் போக்குவரத்துக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று அதிகாலை துவங்கிய கனமழை தற்பொழுது வரை அதி தீவிர கனமழையாக இடைவிடாது பெய்து வருகிறது. மழையின் காரணமாக தேனி, சிவகங்கை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் கல்லூரிகளுக்கும் விடுமுறை. நேற்று காலை 8.30 மணி முதல் இன்று அதிகாலை 1.00 மணி வரையிலான நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 606mm மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து குற்றாலத்தில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நேற்று 17-ம் தேதி மற்றும் இன்று 18-ம் தேதி ஆகிய இரு தினங்களில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை பணிகள் செய்வதற்கு மாவட்டம் நிர்வாகம் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்த 4 மாவட்டங்களில் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றிட தனித்தனியாக அமைச்சர்களை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நியமனம் செய்துள்ளார். தென்காசி மாவட்டத்திற்கு நான், நெல்லை மாவட்டத்திற்கு தங்கம் தென்னரசு, தூத்துக்குடி மாவட்டத்திற்கு கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கன்னியாக்குமரி மாவட்டத்திற்கு மனோதங்கராஜ் உள்ளிட்ட அமைச்சர்களும், மாவட்டத்திற்கு 2 ஐஏஎஸ் அதிகாரிகள் வீதம் நியமனம் செய்யப்பட்டு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தவும், எவ்வித சுணக்கமும் இல்லாமல் பணிகள் மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் அணைகளில் இருந்து தாமிரபரணியில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள நான்கு அணைகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றோரங்களில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 250 மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் கன்னியாக்குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பிரித்து நேற்று அனுப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டத்திற்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் 50பேர் இன்று வருகை தர உள்ளனர். பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்காக நெல்லையில் 19 முகாம்களும், கன்னியாக்குமரியில் 4 முகாம்களும், தூத்துக்குடியில் 2 முகாம்களும், தென்காசியில் ஒரு முகாமும் அமைக்கப்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு தேவையான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினரும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
அணை விவரங்கள்:
முல்லைப் பெரியாறு அணை: 142 அடியில் 136.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 5987 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1500 கன அடி.
வைகை அணை: 71 அடியில் 65.55 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 4401 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 3169 கன அடி.
மஞ்சளாறு அணை: 57 அடியில் 56.30 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 128 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 80 கன அடி.
சோத்துப்பாறை அணை: 126.28 அடியில் 127.42 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 626.98 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 626.98 கன அடி.
சண்முகநதி அணை: 52.55அடியில் 52.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 288கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 14.47 கன அடி.


