
ஆந்திரப் பிரதேசம்:
கர்னூலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமக்களுக்குப் பரிசளித்து வாழ்த்திக் கொண்டிருந்த இளைஞர், சுருண்டு விழுந்து மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
பெங்களூரில் அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞரான வம்சி, தனது நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காகக் கர்னூலில் உள்ள பெனுமடா கிராமத்திற்குச் சென்றுள்ளார். அங்குத் திருமண ஜோடிகளுக்குப் பரிசினை வழங்கியுள்ளனர். அப்போது மணமகன் பரிசைத் திறந்து பார்க்க ஆரம்பித்ததும், உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்த வம்சி திடீரென இடது பக்கமாகச் சரிந்தார். கீழே விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் தாங்கிப் பிடித்தனர். பின்னர் வம்சி தோன் நகர அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததை உறுதி செய்தனர்.
இது தொடர்பாக வெளியான வீடியோ கிளிப்பில், கர்னூலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சில் கலந்துகொண்ட வம்சி, நண்பர்களுடன் மேடையில் இருந்த தம்பதிகளுக்குப் பரிசை வழங்குகிறார்.தொடந்து மணமக்களை உற்சாகப்படுத்திய வம்சி, திடீரென்று தனது சமநிலையை இழந்து கீழே சரியும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் பிற எதிர்பாராத இடங்களில் மாரடைப்பு காரணமாக இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை உருவாக்கி வருகிறது. இதுகுறித்து மும்பை சென்ட்ரலில் உள்ள வோக்கார்ட் மருத்துவமனையின் ஆலோசகர் இருதயநோய் நிபுணரான டாக்டர் ரவி குப்தா பேசுகையில், “நீரிழிவு, உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, காற்று மாசுபாடு, மன அழுத்தம், அதிக உடற்பயிற்சிகள் மற்றும் ஸ்டீராய்டுகள் ஆகியவை இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மாரடைப்புக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. மேலும், இந்தியர்கள் மரபணு ரீதியாக மாரடைப்புக்கு ஆளாகிறார்கள். மேற்கத்திய வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்வது இந்த ஆபத்தை மேலும் அதிகரித்துள்ளது” என்று அவர் கூறினார்.


