governor rn ravi:ஆளுநராகத் தொடர்வாரா ஆர்.என்.ரவி.! திடீர் டெல்லி பயணம்.. காரணம் என்ன.?

Advertisements

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஐந்தாண்டு பதவிக் காலம் ஜூலை 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அவர் தொடர்ந்து ஆளுநராக நீடிப்பாரா? புதிய ஆளுநர் நியமனம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், இந்த மர்ம முடிச்சு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஆளுநர் ரவியின் பதவிகாலம்

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் ஆளுநர் ரவியை மாற்ற வேண்டும் என நாடாளுமன்றத்திலையே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலமுறை குடியரசு தலைவரிடமும் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் தமிழக ஆளுநர் ரவி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் ஆளுநரின் ரவியின் செயல்பாட்டிற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அதே நேரத்தில் பல மாநிலங்களில் காலியாக இருந்த ஆளுநர் பதவியிடங்கள் மாற்றப்பட்டு புதிய ஆளுநர்கள் அறிவிக்கப்பட்டனர். ஆனால் தமிழகத்தில் புதிய ஆளுநர் நியமனம் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்தநிலையில் கடந்த ஜூலை 31ஆம் தேதியோடு ஆர்.என்.ரவி ஆளுநராகப் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் முடிவடைந்தது.

ஆளுநராக ரவி தொடர்வதேன்.?

வடகிழக்கு மாநிலமாக நாகலாந்தில் 2 ஆண்டுகளும், தமிழகத்தில் 3 ஆண்டுகளும் ஆளுநராக ரவி பொறுப்பு வகித்துள்ளார். இந்தநிலையில் கடந்த ஜூலை 31ஆம் தேதியோடு பதவிகாலம் முடிவடைந்த நிலையில் மீண்டும் ஆளுநராகத் தொடர முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி வட்டாரம் கூறுகையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் 156 பிரிவின் படி ஆளுநரின் பதவி காலம் நிறைவடைந்த பிறகும் ஒருவரால் ஆளுநராகப் பணியைத் தொடர முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பது கட்டாயமில்லையெனக் கூறப்பட்டுள்ளது. மேலும் புதிய ஆளுநரை நியமிக்கும் வரை ஆளுநராகவே ரவி தொடர்வாரெனத் தகவல் வெளியாகியுள்ளது.

திடீர் டெல்லி பயணம் காரணம் என்ன.?

மேலும் ஆளுநர் பதவி நீட்டிப்பு இல்லாமல் பதவியில் தொடர்வது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆளுநர் ரவி இந்த மாதத்தில் மட்டும் இரண்டாவது முறையாக டெல்லி சென்றுள்ளார். கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி டெல்லி சென்றவர் இன்று மீண்டும் டெல்லிக்கு பறந்துள்ளார். டெல்லி பயணத்தின்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் அரசியல் நிலவரங்கள் தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாகத் தெரிகிறது. மேலும் ஆளுநர் பதவி நீட்டிப்பு தொடர்பாகவும் ஆலோசிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *