
சாத்தூர் அருகே பள்ளி மாணவிக்கு ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்துள்ள சடையம்பட்டியைச் சேர்ந்த தங்கபாண்டியன்(37). இவருக்குத் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இவர் பனையடிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியிடம் பழகி வந்துள்ளார். அந்த மாணவியிடம் செல்போன் இல்லாததால் அவரது தாய் செல்போன் நம்பரை வாங்கினார்.
அந்தச் செல்போனுக்கு அடிக்கடி தங்கப்பாண்டியன் ஆபாச படங்கள், வீடியோக்களை அனுப்பி உள்ளார். இதனை வெளியே சொல்லக் கூடாது என மிரட்டி அந்த மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் உறவினர் ஒருவர் அந்தப் பள்ளி மாணவியின் செல்போனை வாங்கி பார்த்தபோது அதில் நிறைய ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து மாணவியிடம் விசாரித்தபோது ஆசிரியர் தங்கப்பாண்டியன் நீண்ட நாட்களாக ஆபாச வீடியோ மற்றும் ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறினார். இதையடுத்து மாணவியின் தந்தை சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் தங்கப்பாண்டியன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பள்ளி ஆசிரியரே பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



