Omalur: படு ஜோராக நடந்த ஆடுகள் விற்பனை.. ரூ.1 கோடி வசூல்!

Advertisements

ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூரில் வாரம்தோறும் சனிக்கிழமையன்று ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்தச் சந்தைக்குச் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்குக் கொண்டுவருவார்கள்.

இந்தநிலையில் இன்று கூடிய சந்தைக்கு விவசாயிகள் வளர்க்கும் வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளை அதிகளவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். கடந்த ஒரு மாதமாகத் தேர்தல் நடைமுறைகள் இருந்ததால் ஆடுகள் விற்பனை குறைந்து காணப்பட்டது. கடந்த வாரத்தில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஆடுகள் விற்பனை குறைந்தே இருந்தது. இந்த நிலையில் இன்று கூடிய ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை சுறுசுறுப்பாக நடைபெற்றது.

ஓமலூர் நகர் மற்றும் வட்டார கிராமங்களில் நடப்பு வாரத்திலும், அடுத்தடுத்த வாரங்களிலும் அம்மன் கோவில் திருவிழாக்கள் நடைபெறுகிறது. அதனால் அம்மனுக்கு ஆடுகளைப் பலியிட்டு நேர்த்தி கடன் செலுத்துவதற்காகவும், உறவினர்களுக்கு விருந்து வைக்கவும் பொதுமக்கள் அதிகளவில் ஆடுகளை வாங்கி சென்றனர். அதிலும் கருப்பாக உள்ள வெள்ளாடுகளையே அதிகமாக வாங்கினர்.

மேலும், கொம்பு கிடாக்களையும் மக்கள் வாங்கினர். இன்றைய சந்தையில் இறைச்சிக்காக 10 கிலோ எடையிலிருந்து 35 கிலோ எடைவரை ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. வெள்ளாடுகள் 10 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 30 ஆயிரத்து 500 ரூபாய் வரையிலும், செம்மறியாடுகள் 9 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனையானது.

ஆனால் இன்றைய சந்தையில் ஆடுகள் விலை 500 ரூபாய் வரை விலை அதிகரித்து விற்பனையாகியது. ஆடுகள் விற்பனை அதிகரித்ததால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். தேர்தலுக்குப் பிறகு, பண்டிகை காலம் என்பதால் இன்று நடந்த சந்தையில் ரூ. 1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாகவும், அடுத்து வரும் வைகாசி மாதத்திலும் ஆடுகள் விற்பனை அதிகரிக்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *