
சேலம் அருகே ஏரியில் மூழ்கிச் சிறுவன் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி வீரக்கல் பகுதியைச் சேர்ந்தவர் சிவலிங்கம். விவசாயத் தொழிலாளி இவருக்குச் சிவனந்தினி, சிவஸ்ரீ, திவ்யதர்ஷினிஎன்ற பிள்ளைகள் உள்ளனர். சிவனந்தினி(வயது18) என்ற மகள் சேலத்தில் முதலாமாண்டு நர்சிங் படித்து வந்தார்.
மகன் சிவஸ்ரீ 4-ம் வகுப்பும் திவ்யதர்ஷினி 10-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் மூவரும் அப்பகுதியில் உள்ள கொத்திக்குட்டை ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர்.அப்போது, திடீரெனச் சிவஸ்ரீ மற்றும் திவ்யதர்ஷினி ஆகியோர் நீரில் மூழ்கினர்.
இதைக் கண்ட சிவனந்தினி, இருவரையும் காப்பாற்றுவதற்காக ஏரியில் இறங்கியபோது, அவரும் நீரில் மூழ்கினார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் நீரில் இறங்கி 3 பேரையும் தேடினர். நீண்ட நேரத்துக்குப் பிறகு மூவரையும் மீட்டு, நங்கவள்ளி ஆரம்பச் சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், மூவரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். மேலும் இந்தச் சம்பவம்குறித்து தகவல் தகவலறிந்து வந்த காவல் துறையினர் 3 பேரின் உடல்களையும், பிரேதப் பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



