
சென்னை: வட மாநிலங்களில் அறுவடை துவங்கியுள்ளதால், உச்சத்தை தொட்ட பூண்டு விலை குறையத் துவங்கிஉள்ளது.
மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது. கடந்தாண்டு இம்மாநிலங்களில் பூண்டு சாகுபடி பாதிக்கப்பட்டது.மறுநடவு பணிகளில் விவசாயிகள் இறங்கினர். கையிருப்பில் இருந்த பூண்டு குறைந்ததால், ஆன்லைன் வியாபாரிகளால் பதுக்கல் அதிகரித்தது.
இதனால், தட்டுப்பாடு ஏற்பட்டு பூண்டு விலை கிடுகிடுவென உயர்ந்தது. சென்னை கோயம்பேடு மளிகை சந்தையில், கிலோ முதல் தரப் பூண்டு, 500 ரூபாய்க்கும்; இரண்டாம் தரப் பூண்டு, 400 ரூபாய்க்கும்; மூன்றாம் தரப் பூண்டு, 350 ரூபாய்க்கும் விற்கப்பட்டன. இதனால், நுகர்வோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், வட மாநிலங்களில் பூண்டு அறுவடை துவங்கி உள்ளதால், அவற்றின் விலை சரியத் துவங்கியுள்ளது. கிலோ பூண்டு, 200 முதல் 250 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
புதிய பூண்டை காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், அவை அழுகி வீணாகி விடும்.புதிய பூண்டு வரத்து காரணமாக, பழைய பூண்டு விலையும் கிலோவிற்கு, 100 ரூபாய் குறைந்துள்ளது. அடுத்த மாதம் பூண்டு விலை மேலும் கணிசமாகக் குறையும் என, வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

