
பாஜகவுக்கு தேர்தல் செலவிற்காக 6500 கோடி கொடுத்தவர்கள் யார்? யார்? என விசாரித்தால் மோடி சிறைக்கு செல்வது உறுதி என்று ஆ.ராசா பேசியுள்ளார்.
உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் என்ற கரூர் நாடாளுமன்ற தொகுதி பரப்புரை கூட்டம், கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அர.சக்கரபாணி தலைமை வகித்தார்.
அப்போது பேசிய ஆ.ராசா, “சர்வதிகாரியாள் நடத்தப்படும் கொடுங்கோல் ஆட்சி பாசிசம் என்பதாகும்.இன்று இந்தியாவிலும் கொடுங்கோலாட்சியான பாசிசம் பரவ முயலுகிறது. அதனை எதிர்த்துப் போராடும் தலைவனாக நிற்பவர் தான் முதல்வர் மு க ஸ்டாலின். இந்திய ஜனநாயகத்தில் எப்பொழுதெல்லாம் ஆபத்து ஏற்படுகிறதோ. அப்பொழுதெல்லாம் ஜனநாயகத்தை காக்க துடித்து எழும் ஒரே கட்சி திமுக தான்.
திமுககாரன் சிறை சித்திரவதைக்கு எல்லாம் அஞ்சமாட்டான்.செந்தில் பாலாஜி வெளியே வருவார். பிஜேபியின் முகத்திரையை கிழிப்போம். இருபது வருடமாக மத்திய அமைச்சரவையில் பங்கேற்று உள்ளேன். எல்லா பிரதமரிடமும் பழகியுள்ளேன். ஆனால் இப்பொழுது உள்ள பிரதமர் மோடியை கடந்த ஐந்து வருடங்களாக நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் பார்த்ததே இல்லை. மூன்றாம்வாதி அரசியல்வாதிபோல மோடி பேசி வருகிறார்.
மிகப்பெரிய மோசடி பேர்வழியான அதானியை ஒரு பிரதமர் அரவணைக்கலாமா? 6500 கோடி ரூபாய் பிஜேபிக்கு தேர்தல் செலவுக்காகக் குவிந்துள்ளது. இவ்வளவு பணத்தை யார் கொடுத்தார்கள் என விசாரிக்க வேண்டும். அப்படி தீர விசாரித்தால் மோடி சிறைக்கு செல்வது உறுதி. குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தினால் இந்தியாவில் பாதி பேர் அகதி ஆகிவிடுவார்கள்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு கேள்வி.? வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக எத்தனை சீட்டுகள் ஜெயித்தாலும், மோடியை பிரதமர் வேட்பாளராக ஆக்க வாக்களிக்கமாட்டோம் என நெஞ்சில் துணிவிருந்தால் கூறட்டும். அப்படி கூறினால் அதிமுககாரன் அனைவரும் சிறையில் இருப்பான். மாநில பேரிடர் நிவாரணத் தொகை ஒரு பைசா கூடத் தரவில்லை. ஆனால் தந்து விட்டோம் என நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற பொய் பேசுகிறார்.
மோடி மீண்டும் பிரதமராக வந்தால், நாமெல்லாம் இந்தியாவில் இருப்போமா என்பது கேள்விக்குறியாகிவிடும். மணிப்பூரில் பழங்குடியின பெண்களை நிர்வாணமாக ஆக்கி ஜெய் ஸ்ரீ ராமெனக் கோஷமிட்டவாறு ஊர்வலமாகக் கூட்டி வந்தது காட்டுமிராண்டி கூட்டம். மோடி என்ன சொல்கிறார்… மணிப்பூரில் அமைதி நிலவுகிறது எனப் பேசுகிறார். இந்தக் காட்டுமிராண்டித்தனமான ஆட்சி மீண்டும் வரக் கூடாது என்பதற்காகத் தான் திமுக பாடுபட்டு வருகிறது என்று பேசினார் ஆ.ராசா.


