
கஞ்சா விற்ற வாலிபருக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ. 50,000 அபராதமும் விதித்து புதுச்சேரி போதை பொருள் தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவு விதித்துள்ளது.
கடந்த 2021 ஆண்டு புதுச்சேரி கண் டாக்டர் தோட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடைய மகன் முகேஷ் என்கின்ற வாழைக்கா என்பவர் அப்பகுதியில் கஞ்சா விற்றுக்கொண்டு இருந்தார். தகவல் அறிந்த ஒதியன்சாலை போலீசார் அங்குச் சென்று அவரைக் கைது செய்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.
இது சம்மந்தமாகப் போதை பொருள் தடுப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புதுச்சேரி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் (போதை பொருள் தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில்) விசாரணை நடைபெற்றது. வழக்கிணை விசாரித்த மாண்புமிகு நீதிபதி இளவரசன் இன்று தீர்ப்பு வழங்கினார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி முகேஷ் என்கின்ற வாழைக்காவிற்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ. 50,000 அபராதமும் விதித்து இன்று தண்டனை வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் புதுச்சேரி அரசு வழக்கறிஞரும் மற்றும் இந்திய அரசின் அமலாக்கத்துறை வழக்கறிஞருமான விநாயகம் அரசு தரப்பில் ஆஜரானார்.

