
விபத்தை ஏற்படுத்திவிட்டு கஞ்சா போதையில் பெண் தோழியுடன் வாலிபர் ஓட்டம்!
சென்னை அண்ணாநகரில் இன்று அதிகாலை தாறுமாறாக ஓடிய கார் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 2 தூய்மை பணியாளர்கள் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.
இவர்கள் மீட்கப்பட்டடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருந்தபோதிலும் இந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் காரை ஓட்டியவர் ஆசிப் எனத் தெரியவந்தது.
அவரிடம் விசாரணை நடத்தியபோது, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஆசிப் என்பவர் கஞ்சா போதையில் இருந்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆசிப் ஏரோநாட்டிகல் படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
அதிகாலை 2.30 மணியளவில் ஆசிப் தனது நண்பர் ரமணா மற்றும் ஒரு பெண் தோழியுடன் மது, கஞ்சா அருந்திவிட்டு போதையில் கார் ஓட்டி வந்தது அம்பலமாகியுள்ளது. கார் விபத்து நடந்தபோது ஆசிப் உடன் வந்த ரமணா மற்றும் பெண் தோழி என 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

