
10அடிக்கு மேல் சிலைகளை வைக்கக் கூடாது! பட்டாசு வெடிக்க கூடாது…
சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவில் மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும் விதமாகவோ, பிற மதத்தினர் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடவோ, அரசியல் கட்சிகள் அல்லது மத ரீதியிலான தலைவர்களுக்கு ஆதரவான பதாகைகளையோ, விளம்பர தட்டிகளையோ வைக்கக் கூடாது எனசென்னை காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 18-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை பெருநகர காவல் துறை சார்பில் பல்வேறு அமைப்பினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக, சிவசேனா கட்சிகள் மற்றும் இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் உட்பட 29 அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.அப்போது, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் நிறுவும் இடத்தில் அதன் நில உரிமையாளர், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, நெடுஞ்சாலை அல்லது அரசுத் துறையிடம் அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டது.
தீயணைப்புத்துறை, மின் வாரியத்திடம் தடையில்லா சான்றிதழ் பெறுவதுடன், சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம் விநாயகர் சிலை வைப்பதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து, அதில் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளைக் கடைபிடிப்பது தொடர்பாக உறுதியளிக்கவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், விநாயகர் சிலை அடித்தளத்திலிருந்து மொத்தம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. சிலைகளைப் பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனை, கல்வி நிலையங்களுக்கு அருகில் வைக்கக் கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.மேலும், நிகழ்ச்சியின்போது மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும் விதமாகவோ, பிற மதத்தினர் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடவோ, அரசியல் கட்சிகள் அல்லது மத ரீதியிலான தலைவர்களுக்கு ஆதரவான பதாகைகளையோ, விளம்பர தட்டிகளையோ வைக்கக் கூடாது எனவும் சென்னை காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.குறிப்பாக, விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் சிலைகளைக் கரைக்கும் இடத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



