Ganesh Chaturthi 2023:நாடு முழுவதும் கோலாகலம்!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது…

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. தமிழகம் முழுவதும் பொது இடங்களில் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருச்சி மலைக்கோட்டை, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், கோவை புளியங்குளம் பெரிய முந்தி விநாயகர், கும்பகோணம் திருவலஞ்சுழி சுவேத விநாயகர், புதுச்சேரி மணக்குள விநாயகர், கன்னியாகுமரி தக்கலை அடுத்த கேரளபுரம் விநாயகர் உட்பட அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.

சென்னையில், புரசைவாக்கம், பாரிமுனை, தியாகராய நகர், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் குவிந்துள்ளன. வீடுகளில் வைத்துப் பூஜை செய்வதற்காக ரூ.50 முதல் ரூ.500 வரையிலான சிறிய விநாயகர் சிலைகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

இது மட்டுமின்றி, களிமண் விநாயகர் சிலைகளும் ஆங்காங்கே விற்கப்பட்டு வருகின்றன. விநாயகருக்கு மேல் வைப்பதற்கான சிறியஅளவிலான குடைகளையும் குழந்தைகள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். நேற்று மாலையில் பூஜை பொருட்கள் வாங்குவதற்கு கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், கடை வீதிகள் களைகட்டின. விநாயகருக்கு உகந்த எருக்கம்பூ மாலை, அருகம்புல் விற்பனையும் விறுவிறுப்பாக நடந்தது.

பொது இடங்களிலும் பெரிய பந்தல்கள் அமைக்கப்பட்டு விநாயகர்சிலைகள் அமைக்கப்படுகின்றன. சென்னையில் 5,501 சிலைகள் உட்பட தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. இந்து முன்னணி சார்பில் மட்டும் சென்னையில் 2,267 சிலைகளும், தமிழகம் முழுவதும்1.28 லட்சம் சிலைகளும் வைக்கப்படுகின்றன. இந்த ஆண்டு விநாயகர்சிலைகள் வைக்கக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பொது இடங்களில் பூஜைக்காக வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட சிலைகள் ஒரு வார வழிபாட்டுக்குப் பிறகு, வரும் 24-ம் தேதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.

சிலைகள் கரைப்பது தொடர்பாகப் போலீஸார், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஏற்கெனவே பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சிலைகள் வைக்கப்படும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 24 ஆயிரம் போலீஸாரும், தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம்போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *