Fishermen Arrest : இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்..22 மீனவர்கள் கைது!

Advertisements

இலங்கை கடற்படையில் தொடர் அத்துமீறலுக்கு எதிராக மீனவர்கள் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று நள்ளிரவு தூத்துக்குடியை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படை அட்டூழியம்

இந்தியா இலங்கைக்கு கச்சதீவை தாரைவார்த்ததிலிருந்து மீனவர்களுக்குத் தொடர் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. இது மட்டுமில்லாமல் மீனவர்களின் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான படகையும் பறிமுதல் செய்து வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாக மாறிவிட்டது.

கடலில் சென்று மீன் பிடிக்கவே அச்சம் அடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அவர்களது படகில் இலங்கை கடற்படை கப்பல் வேகமாக மோதியது. இதில் படகு மூழ்கி ராமேஸ்வரம் மீனவர்கள் ஒருவர் உயிரிழந்தார்.

22 மீனவர்கள் கைது

இந்தச் சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசு இலங்கை தூதர்களை அழைத்துக் கண்டனம் தெரிவித்தது. இதனிடையே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்துள்ளது. நேற்று தூத்துக்குடியிலிருந்து 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது தமிழக மீனவர்கள் 22 பேரை எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடறைபடை கைது செய்துள்ளது.

மேலும் மீனவர்களின் 2 படகுகளையும் பிடித்துச் சென்றது. இன்று காலைக் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இந்தச் சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *