
நாட்டில் மிக நீளமான பாலமாக கருதப்படும் அடல் சேது பாலத்தில் முதல் விபத்து நடந்துள்ளது.
மும்பை – நவி மும்பை இடையே கட்டப்பட்டுள்ள அடல் சேது என்ற கடல்பாலத்தை கடந்த 12-ம் தேதி பிரதமர் நரந்திர மோடி திறந்து வைத்தார். 21.8 கி.மீ நீளம் கொண்ட இந்த பாலம், 16.5 கி.மீ கடலில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மிக நீண்ட கடல் பாலம் மற்றும் மிக நீண்ட பாலம் என்ற பெருமையை இந்த பாலம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த புதிய பாலத்தில் முதல் விபத்து நடந்துள்ளது. இந்த பாலத்தின் மீது அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாடுகளை இழந்து விபத்தில் சிக்கியது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கார்கள் வேகமாக செல்வதையும் அப்போது அதிவேகமாக கார்களுக்கு இடையே வரும் சிவப்பு நிற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவற்றின் மீது மோதி கவிழ்வதை பார்க்க முடிகிறது. தொடர்ந்து உருண்டு புரண்டு பல அடி நீளத்திற்கு சென்ற கார் ஒருகட்டத்தில் சுவற்றின் மீது மோதி நிற்பதையும் பார்க்க முடிகிறது.
First Accident on MTHL!
In Ravi Shashtri’s words: Thodi der ke liye….(those who know, know)
Literally pic.twitter.com/UK0TJfL7Kb
— Roads of Mumbai (@RoadsOfMumbai) January 21, 2024
அந்த பாலத்தில் சென்ற மற்றொரு காரில் பயணித்த நபர் இந்த காட்சிகளை படமாக்கி உள்ளார். 2 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் அந்த காரில் பயணித்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும் லேசான காயங்களுக்கு உயிர் தப்பினர்.
செவ்ரி – நவ ஷேவா பகுதிகளை இணைக்கும் இந்த பாலம் ரூ.21,200 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் மும்பை சர்வதேச விமான நிலையம், நவி மும்பை விமான நிலையம் ஆகிய பகுதிகளை எளிதில் சென்றடைய உதவுகிறது. மேலும் நவி மும்பை சர்வதேச விமான நிலையம், மும்பை – புனே மோட்டார்வே, மும்பை – கோவா நெடுஞ்சாலை போன்ற முக்கியமான பகுதிகளை இணைக்கிறது.
மும்பையில் இருந்து புனே, கோவா மற்றும் தென்னிந்திய பகுதிகளுக்கும் செல்லும் தூரத்தை இந்த பாலம் வெகுவாக குறைக்கிறது. மும்பையில் இருந்து புனே மற்றும் கோவா பகுதிகளுக்கு செல்ல 2 மணி நேர பயணத்தை இந்த பாலம் வெறும் 20 நிமிடங்களாக குறைத்துள்ளது. மேலும் ஜவஹர்லால் நேரு துறைமுகம் மும்பை துறைமுகம் இடையிலான பயணங்களுக்கு உதவும். இந்த பாலத்தில் ஒரு நாளைக்கு 70,000 கார்கள் பயணிப்பதாக கூறப்படுகிறது.


