ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு!

Advertisements

காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது பாஜக எம்பிக்கள் பிரதாப் சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகியோர் காயமடைந்த விவகாரத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது 5 பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தச் சமயம், நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி கிழே விழுந்து தலையில் அடிபட்டது.

கீழே விழுந்து காயமடைந்தவுடன் பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி செய்தியாளர்களைச் சந்தித்து “நான் நாடாளுமன்ற வளாகத்தில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தேன். அப்போது எனது அருகில் ராகுல் காந்தி இருந்தார். ராகுல் காந்தி அருகில் இருந்த ஒரு எம்பியை தள்ளிவிட்டார். அந்த எம்பி என்மீது விழுந்தார். அதனால் நான் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்தேன்” எனக் கூறினார். அதன்பின் அவர் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இப்படியான பரபரப்பான சூழலில், பாஜக எம்பி அனுராக் தாகூர் சார்பில் நாடாளுமன்ற தெரு காவல் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில் ராகுல் காந்தி மீது வேண்டுமென்றே காயப்படுத்துதல், கொலை முயற்சி, மற்றவர்களின் உயிர் அல்லது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கொடுத்தது. குற்றவாளிகளைப் பயன்படுத்துதல், குற்றம் செய்யும் நோக்கத்துடன் ஒன்றாகக் கூடுதல் உட்பட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக சார்ப்பில் கொடுக்கப்பட்ட இந்தப் புகாரை ஏற்றுக்கொண்டு விசாரித்த நாடாளுமன்ற தெரு காவல்துறையினர் கொலை முயற்சி பிரிவைத் தவிர்த்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஒரு பக்கம் பாஜக புகார் அளித்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் பாஜக மீது குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் உள்ளே நுழைய முற்பட்டபோது பாஜக எம்பிக்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது எங்கள் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவர்கள் தள்ளினர். இதில், மல்லிகார்ஜுன கார்கே காலில் அடிபட்டது. ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்த காலில் மீண்டும் அடிபட்டது எனக் கூறி காங்கிரஸ் சார்பிலும் பாஜகவினருக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *