
Fighter Jet Accident: அமெரிக்காவில் மாயமான ராணுவ விமானம்! தெற்கு கரோலினாவில் சிதைபாடுகள் சிக்கின… விமானி அதிர்ஷ்டவசமாகத் தப்பித்தார்.
பறந்துக் கொண்டிருந்தபோது திடீரெனக் காணமல் போன அமெரிக்க மரைன் கார்ப்ஸின் மேம்பட்ட F-35B லைட்னிங் ஸ்டெல்த் ஜம்ப் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதை அரசு உறுதிப்படுத்தியது. செப்டம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தெற்கு கரோலினாவில் பறக்கும்போது, அந்த விமானம் மாயமானது. பறந்துக் கொண்டிருந்த விமானத்தை, அதை இயக்கிக் கொண்டிருந்த விமானி, தன்னியக்க பைலட் பயன்முறைக்கு மாற்றிவிட்டு, அவர் எமர்ஜென்சி முறையில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விமானம் காணாமல் போனதும், விமானி ஏன் திடீரென்று வெளியேறினார் என்பதும் மர்மமாக இருந்த நிலையில், தற்போது விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. அவசரகால நிலையைப் பயன்படுத்தி வெளியேறிய விமானி (Pilot Of F-35B Jet) அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் ஏன் விமானத்தைத் தானியக்க முறைக்கு மாற்றினார் என்பதோ, அதற்கான சூழ்நிலைகள் என்ன என்பதோ ரகசியமாகவே உள்ளது.
கடந்த மாதம் இரண்டு மரைன் கார்ப்ஸ் விபத்துக்குள்ளான பிறகு, அனைத்து விமானங்களையும் நிறுத்த முடிவு எடுக்கப்பட்டது. ஒரு F-18 விமானி சான் டியாகோ அருகே விமானத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது இறந்தார், மேலும் ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் ஆஸ்ப்ரே விபத்துக்குள்ளானதில் மூன்று கடற்படையினர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். பென்டகன் திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் முந்தைய இரண்டு விபத்துக்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளது.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள F-35B மரைன் கார்ப்ஸ், ஏர் ஸ்டேஷன் பியூஃபோர்ட்டை (Air Station Beaufort) அடிப்படையாகக் கொண்டது, இது மரைன் ஃபைட்டர் அட்டாக் டிரெய்னிங் ஸ்குவாட்ரான் 501 இல் உள்ளது. காணாமல் போன விமானத்துடன் மற்றுமொரு F-35B விமானமும் பறந்து கொண்டிருந்தது, அது பாதுகாப்பாகத் தளத்திற்குத் திரும்பியது.
காணாமல் போன ‘ஸோம்பி’ F-35B விபத்துக்குள்ளாகியிருக்கும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டது. ஏனெனில் அதிலிருந்த எரிபொருள், இரண்டு மணி நேரம் மட்டுமே பறக்கப் போதுமானதாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் அது தரையில் இறங்குவதற்கு முன் நூற்றுக்கணக்கான மைல்கள் பறந்திருக்க சாத்தியம் உண்டு என்று கூறப்பட்டது.
தற்போது காணாமல் போன 24 மணி நேரத்திற்கு பிறகே மரைன் கார்ப்ஸ் F-35B போர் விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்று (2023 செப்டம்பர் 18 திங்கள்கிழமை) மாலை விமானம் விபத்துக்குள்ளானதாகவும், அதன் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
தென் கரோலினாவில் F-35 ஜெட் மர்மமான முறையில் காணாமல் போனதை அடுத்து, அமெரிக்காவிற்கு உள்ளேயும் வெளியேயும் செயலில் இருந்த அனைத்து மரைன் கார்ப்ஸ் விமானங்களும் திங்கள்கிழமை தரையிறக்கப்பட்டன. கடற்படையின் செயல் தளபதி ஜெனரல் எரிக் ஸ்மித் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
தென் கரோலினாவில் உள்ள வில்லியம்ஸ்பர்க் கவுண்டிக்கு அருகில் மேம்பட்ட, ஜெட் விமானத்தின் சிதைவுகள் இருப்பதை Joint Base Charleston (JBC) அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இது தொடர்பாக X இல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மரைன் கார்ப்ஸ் ஏர் ஸ்டேஷன் பியூஃபோர்ட் இணைந்து நடத்திய ஆபரேஷனில் போர் விமானம் விபத்துக்குள்ளானதும், அதன் சிதைபாடுகள், தளத்தின் வடகிழக்கில் இரண்டு மணிநேரம் தொலைவில் உள்ள இடத்தில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
“ஜாயின்ட் பேஸ் சார்லஸ்டன் மற்றும் @MCASBeaufortSC இன் பணியாளர்கள், உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன், வில்லியம்ஸ்பர்க் கவுண்டியில் ஒரு குப்பைக் களத்தை அமைத்துள்ளனர்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிகாரிகள் இடிபாடுகளை ஆய்வு செய்தபோதிலும், ஜெட் காணாமல் போனது தொடர்பான கூடுதல் தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை. “விசாரணை செயல்முறையைப் பாதுகாக்க கூடுதல் விவரங்களை” வழங்க முடியாது என்று கூறப்படுகிறது.
“விபத்துகுறித்த விசாரணை மேற்கொள்ளபப்ட்டுள்ளது. மேலும் விசாரணை செயல்முறையின் நிலைத்தன்மையை பாதுகாக்க கூடுதல் விவரங்களை எங்களால் வழங்க முடியவில்லை. காணமல் போன விமானத்தைத் தேடுவதில் எங்களுக்கு ஆதரவு வழங்கிய உள்ளூர், மாவட்ட மற்றும் மாநில அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று அரசு தரப்பில் நன்றி கூறப்பட்டது.
F-35B ஜெட் என்ன ஆனது?
அமெரிக்க அரசாங்கம் மற்றும் இராணுவம் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், ஜெட் மற்றும் அதன் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனையடுத்து, இந்த விமானம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால், அதை உடனடியாகத் தெரிவிக்குமாறு சமூக ஊடகங்களில் அதிகாரிகள் கோரிக்கை வெளியிட்டனர்.
80 மில்லியன் டாலர் மதிப்புள்ள அதிநவீன F-35, ஒற்றை இருக்கை போர் விமானம், லாக்ஹீட் மார்ட்டினால் தயாரிக்கப்பட்டது மற்றும் நிறுவனத்தின் இணையதளத்தின்படி, 1,200 மைல் வேகத்தை எட்டும். இது செங்குத்தாகத் தரையிறங்குவது மற்றும் குறுகிய டேக்-ஆஃப்களுக்கு திறன் கொண்டது, மேலும் “உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம்” என்றும் கூறப்பட்டது.
ஆனால், மத்திய அரசாங்கத்தால் வாங்கப்பட்ட உயர்தர தொழில்நுட்பம் மற்றும் மென்பொருளைக் கொண்ட விமானத்தைக் கடற்படையினர் மற்றும் அதிகாரிகளால் ஏன் கண்காணிக்க முடியவில்லை என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதுமட்டுமல்ல, பென்டகனின் மிகவும் விலையுயர்ந்த ஆயுத அமைப்பு திட்டமான F-35 லைட்டிங் II போர் விமானங்களின் விலை மிகவும் அதிகம் என்று விமர்சித்த எதிர்கட்சியினரின் கேள்விகள் இனிமேல் வலுப்பெறும்.
(ஏஜென்சிகளின் உள்ளீடுகளுடன்)

