
தனது செல்லப்பிராணி மீது கொண்ட அன்பின் காரணமாக, அதற்கும் சர்வதேச பாஸ்போர்ட் எடுத்துள்ளார் துபாயை சேர்ந்த அந்த பறவையின் உரிமையாளர். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.துபாய், சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் செல்லப்பிராணிகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் குறித்த வீடியோக்கள் இணையத்தில் கவனம் பெற்று வருவதை பார்க்க முடியும்.
தான் செல்லமாக வளர்க்கும் பருந்தை, அதன் உரிமையாளரான துபாயை சேர்ந்த ஒருவர் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்கிறார். அந்த பருந்து அவருடன் விமானத்தில் பயணம் செய்கிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது லைக்குகளை குவித்து வருகிறது. விமான நிலையத்தில் டிக்கெட் மற்றும் பாஸ்போர்ட் பரிசோதனையின் போது, பருந்துடன் அந்த உரிமையாளர் நின்று கொண்டிருந்தார்.
அவரைப் பார்த்த விமான பயணி ஒருவர், “இந்த பருந்து உங்களுடன் வருகிறதா?” என்று கேட்டார். அதற்கு உரிமையாளர், “ஆமாம், என்னுடன் விமானத்திற்குள் வரும். நாங்கள் மொராக்கோ செல்கிறோம்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “இந்த பருந்துக்கு பாஸ்போர்ட் ஏதேனும் இருக்கிறதா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அதற்கு பதில் அளித்த அந்த துபாய் நபர், பருந்துடைய சர்வதேச பாஸ்போர்ட்டை எடுத்து அந்த நபரிடம் காண்பித்தார். அதில் ‘ஃபால்கான் பாஸ்போர்ட்’ என்று எழுதி இருந்தது.
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இந்த பருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் தகுதி உடையது என்று அந்த ஐக்கிய அரபு அமீரக பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அந்த விமான பயணி ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றார்.இது தொடர்பான வீடியோ ஒன்று கடந்த 28ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டு, சில மில்லியன் பார்வைகளை கடந்து வருகிறது.



