
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் நிலையில், வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்குப் பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடங்கி உள்ளது.
வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 பேர் வாக்களிக்க உள்ளனர்.
இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 46 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாத, 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் தங்கள் வாக்கினை தபாலில் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில், 209 முதியோர்கள், 47 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 256 பேர் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பப் படிவம் வழங்கி இருந்த நிலையில், அவர்களிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வாக்குப் பதிவு மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்களைத் தயார் செய்யும் பணியில் தேர்தல் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
வாக்குப் பெட்டிகள் வைப்பதற்கான அறை, பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகளைச் சரி செய்யும் பணியும் தொடங்கியுள்ளது. பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில், வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்குப் பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடங்கி உள்ளது. வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பூத் சிலிப் வழங்கும் பணி பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள் முடிவடையும் எனத் தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.



