
கட்சி பெயரில் மாற்றம் செய்வதற்கான பணிகளையும் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய்,
நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். இப்போது படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும் அவர் அடுத்த ஆண்டு, அதாவது 2025 ஆம் ஆண்டு பிற்பகுதியிலிருந்து முழுநேர அரசியல் பயணத்தில் ஈடுபட உள்ளார். சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நடிகர் விஜய் கட்சி தவெக போட்டியிட உள்ளது.
இதனையும் கட்சி ஆரம்பிக்கும்போதே அவர் அறிக்கைமூலம் தெரிவித்து இருந்தார். மேலும், கட்சிகுறித்த எழும் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்காமல் புன்னகையுடன் கடந்து செல்லுமாறும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியிருந்தார். இருப்பினும் அவருடைய கட்சி பெயரே பெரும் விமர்சனக்குள்ளானது.
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் ’வெற்றி’-க்கு அருகாமையில் ’க்’ கட்டாயம் வர வேண்டும் எனத் தமிழ் மொழி ஆர்வலர்கள் வலியுறுத்தினர். கட்சி பெயரையே தவறாகப் பெயரிட்டுள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டது. இது விஜய் கவனத்துக்கும் நிர்வாகிகள் எடுத்துச் சென்ற நிலையில், இந்தக் கோரிக்கையை அவர் ஏற்றுக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கட்சி பெயரில் மாற்றம் செய்வதற்கான பணிகளையும் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், தனது கட்சி தொண்டர்கள் இனி ’தமிழக வெற்றிக் கழகம்’ என்றே பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அத்துடன் கிராமங்கள் தோறும் நிர்வாகிகள் நியமனத்தை விரைவுபடுத்துமாறு கூறியிருக்கும் விஜய், ரசிகர்கள் அனைவரையும் கட்சி உறுப்பினர்களாக மாற்றும் பணிகையும் தொடங்கியுள்ளார். இருப்பினும் இந்தப் பணிகளில் இப்போதைக்கு எந்த வேகமும் காட்டவில்லை. வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் படப்பிடிப்பு முடிவடைந்ததும் கட்சி பணிகளைத் துரிதப்படுத்த இருக்கும் அவர், இன்னொரு படத்திலும் நடிக்க இருக்கிறார். இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் முடிந்தளவுக்கு சீக்கிரமாக முடித்துக் கொடுத்துவிட்டு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை விஜய் தொடங்க திட்டமிட்டிருக்கிறார்.
திமுக, அதிமுகவை எதிர்த்து அரசியல் களம் காண இருக்கும் அவர், விரைவில் கட்சி கொடி, கொள்கை ஆகியவற்றை வரையறை செய்து மக்களை நேரடியாகச் சந்திக்கவும் இருக்கிறார். இவரின் அரசியல் வருகை தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் வாக்கு அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார் என்பது இன்னும் யூகிக்க முடியாத நிலை இருப்பதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


