
நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என ஓ.பி, எஸ் கூறிய நிலையில்அ.தி.மு.க. கொடி, சின்னத்தைப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிரந்தர தடை விதித்து சென்னை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்தத் தடை விதிக்க கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றைப் பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில், இரு தரப்பில் இருந்தும் காரசார வாதங்கள் நிறைவுபெற்றது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அ.தி.மு.க. பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு விதித்த இடைக்கால தடையை நிரந்தர தடையாக விதித்து உத்தரவிட்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என ஓ.பி, எஸ் கூறிய நிலையில் சென்னை ஐகோர்ட்டு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

