
திமுக அரசு போதை பொருளைத் தடுக்க தவறியதன் விளைவு தான் தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றியுள்ளது என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.குற்றம்சாட்டியுள்ளார் .
சென்னை: தமிழகத்தில் போதைப் பொருட்களைத் தி.மு.க., அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டதாகக் கூறி, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது.
சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் நடந்த போராட்டத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இ.பி.எஸ் கூறியதாவது: ஜாபர் சாதிக் திமுக அயலக அணியில் பொறுப்பாளராகப் பதவி வகித்துள்ளார். பல ஆண்டுகளாகப் போதைப்பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக் ஈடுபட்டு வந்துள்ளார். 45 முறை வெளிநாடுகளுக்கு ஜாபர் சாதிக் போதைப்பொருளை கடத்தியுள்ளார்.
முதல்வர் குடும்பத்துடனும், போலீசாருடனும் ஜாபர் சாதிக் நெருங்கிப் பழங்கியுள்ளார். தீர விசாரிக்க வேண்டும். ஆளும் அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகிறோம். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
திமுக அரசு போதை பொருளைத் தடுக்க தவறியதன் விளைவு தான் தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றியுள்ளது. போதைப்பொருள் கடத்தல் மாபியா ஜாபர் சாதிக், தான் சம்பாதித்த பணத்தை தி.மு.க., நிர்வாகிகளுக்கு அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
விழுப்புரத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சண்முகம் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. உடுமலை பஸ் ஸ்டாண்ட் முன்பு, அ.தி.மு.க, சார்பில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.


