
அதிக கனமழை காரணமாக தூத்துக்குடி,நெல்லை, கன்னியாகுமரியில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட தென் மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
தூத்துக்குடி: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
கடந்த 2 நாட்களாக அதிகனமழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும், பல பகுதிகளில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நெல்லை-தூத்துக்குடி இடையேயான ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, நெல்லை – சென்னை இடையே இருமார்க்கங்களிலும் வந்தே பாரத் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் – பாலக்காடு, நெல்லை – ஜாம் நகர் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நிஜாமுதீன் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில், முத்துநகர் விரைவு ரெயில், கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கனமழை காரணமாக தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகர் பகுதி மற்றும் திருச்செந்தூர் பகுதி, கிராமப்புறங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நெல்லை, கன்னியாகுமரியிலும் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


