
மருத்துவர் அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணி சேர்த்த கையோடு டெல்லிக்கு பறந்த எடப்பாடி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பின்போது கூட்டணி விவகாரம் முடிவுக்கு வந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் டிடிவி தினகரன் பாஜகவுடன் இணைகிறார் என்ற தகவலும் கசிந்திருக்கிறது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு தற்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த உற்சாகமாக இருக்கிறார். காரணம் பாஜகவுடன் மோதல் போக்கு முடிவுக்கு வந்திருக்கிறது . அதுவல்லாமல் புதிய கூட்டணிகள் அமைப்பது குறித்த நடவடிக்கைகள் ஆரம்பம் ஆகிவிட்டன.
இதன் நிமித்தமாக , தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி பேச்சை உற்று நோக்கினால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போன்று என் ஆட்சியில் என் அதிமுகவில் என் கூட்டணியில் என தன்னை முன்னிலைப்படுத்தி பேச ஆரம்பித்திருக்கிறார். இதற்கு காரணம் டெல்லியில் நடந்த பேச்சு வார்த்தையில் அதிமுக கட்சி நடவடிக்கைகளில் பாஜக தலையிடாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்திருக்கிறார்.
இதனிடையே அமித்சாவும் எடப்பாடி பழனிச்சாமியும் பேசும் பொழுது முதல் கட்டமாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அப்பொழுது உள்துறை அமைச்சர் அமித்ஷா தங்களுக்கு 50 தொகுதிகளை ஒதுக்கி தர வேண்டும் மூன்று அமைச்சர் பதவிகளையும் தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இதில் விசேஷம் என்னவென்றால் , டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது அந்த வகையில் டிடிவி தினகரனை பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் சேர்த்துக்கொள்ள இருக்கிறார்கள்.தங்களுக்கு தரப்படும் 50 தொகுதிகளில் டிடிவி தினகரனுக்கு தேவையான தொகுதிகளை பாஜக ஒதுக்கிக் கொள்ளும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.
டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதற்கு தேவையான காரணங்களை பற்றியும் பேசப்பட்டு இருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 2.35% வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தாலும் தென் மாவட்டங்களில் அதிமுகவின் வெற்றியை கிட்டத்தட்ட 20 தொகுதிகளில் தடுத்து நிறுத்தி இருக்கிறது. இது மட்டும் அல்லாமல் சுமார் 24 தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மூன்றாவது இடம் பிடித்திருக்கிறது.
அந்த வகையில் , டிடிவி தினகரனை இணைக்காவிட்டால் இதே போன்ற பாதிப்புகள் ஏற்படும் இது மட்டுமல்லாமல் அவர் விஜய் பக்கம் தாவுவதற்கு தயாராக இருக்கிறார் . அந்த சூழ்நிலையை நாம் ஏற்படுத்தி விடக்கூடாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்திருக்கிறார்.
இது மட்டுமல்லாமல் ஓ பன்னீர்செல்வத்தையும் நம்முடன் இணைத்துக் கொள்ளலாம். டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் முக்குலத்தோர் மக்கள் மத்தியில் குறிப்பிட்ட வாக்கு எண்ணிக்கையை வைத்திருக்கிறார்கள் என்றும் அமித்ஷா பேசியிருக்கிறார். இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவிக்கும் பொழுது, டிடிவி தினகரனை பொறுத்த வரையில் ஒரு கட்சிக்கு தலைவராக இருக்கிறார் . அந்த கட்சிக்கு வாக்கு வங்கி இருக்கிறது.
அதே சமயம் ஓ பன்னீர்செல்வத்திற்கு கட்சி என்று எதுவும் கிடையாது . மேலும் , அவரிடம் மக்கள் செல்வாக்கும் இல்லை எனவே டி டிவி தினகரனை வேண்டுமானால் இணைத்துக் கொள்ளலாம் . ஓ பன்னீர்செல்வத்தை இணைத்துக்கொள்ள முடியாது. அது மட்டும் அல்லாமல் கடந்த தேர்தலில் அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே ஓ பன்னீர்செல்வம் முழு நேரமும் வேலை பார்த்தார் என என கருத்து தெரிவித்திருக்கிறார்.
இதன் அடிப்படையில் டிடிவி தினகரனை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு இருவரும் வந்திருக்கிறார்கள். இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷா ஆகியோர் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும் பொழுது பிரதமர் மோடியின் கருத்து குறித்து அமித்ஷா எடப்பாடி இடம் தெரிவித்திருக்கிறார் . பிரதமர் மோடியை பொருத்தவரையில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை எப்படயும் அகற்ற வேண்டும் என்று விரும்புகிறார்.
கடந்த தேர்தலின் போது எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் இருந்ததோ அந்த கட்சிகள் மீண்டும் கூட்டணியோடு இருக்க வேண்டும். இது தவிர கூடுதலாகவும் கட்சிகளை சேர்க்க வேண்டும் என மோடி சொல்லி இருப்பதாக அபிக்ஷா பேச்சை தொடங்கி இருக்கிறார்.இதைத்தொடர்ந்து திமுக பற்றியும் இருவரும் பேசியிருக்கிறார்கள். அப்பொழுது எடப்பாடி பழனிச்சாமி திமுக அமைச்சர்களிடம் ஏராளமான அளவில் பணம் இருக்கிறது.
அதை இந்த தேர்தலில் பயன்படுத்த இருக்கிறார்கள் என கருத்து தெரிவித்திருக்கிறார் இது குறித்து அமித்ஷா பேசும்போது இது பற்றிய தகவல் எனக்கும் வந்து இருக்கிறது. என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறோம் என பதில் சொல்லி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து விஜய் குறித்தும் இருவரும் பேசியிருக்கிறார்கள். அப்பொழுது உள்துறை அமைச்சர் அமித்ஷா நிச்சயமாக தமிழ்நாட்டில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்காது . ஏனென்றால் ராகுல் காந்தியும் விஜயும் தனிப்பட்ட முறையில் பேசி வருகிறதாக எங்களுக்கு தகவல் வந்திருக்கிறது.
எனவே கடைசி நேரத்தில் தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் இணையும் திமுகவுடன் உள்ள உறவு முறியும் என தகவல் தெரிவித்து இருக்கிறார். இதற்கிடையே தொகுதி பங்கீடு குறித்து இருவரும் பேசும் பொழுது 40 தொகுதிகளை ஒதுக்கி தருகிறேன் என எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். இதற்கு சரி என்று அமைச்சர் தலையாட்டியதாக தெரிகிறது இது மட்டுமில்லாமல் அமைச்சரவையில் இடம் தர முடியாது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார் .
ஆனால் அமித்ஷா விடாப்படியாக அமைச்சரவையில் வாய்ப்பு கொடுங்கள் என கேட்டு இருக்கிறார் . இதற்கு பதில் சொல்ல முடியாத எடப்பாடி பழனிச்சாமி நான் சென்னைக்கு சென்று நிர்வாகிகள் இடம் ஆலோசனை செய்து சொல்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்து ஜனவரி மாதம் இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரத்திற்குள் முடிவெடுத்து விடுங்கள் என அமித்ஷா எடப்பாடி பழனிச்சாமி இடம் சொல்லி இருக்கிறார்..
இதனால் அதிமுக பாஜக இடையே நடைபெற்று வரும் மோதல் போக்கு மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்துறை அமைச்சர் அமித்ஷா இடையிலான மோதல் போக்கு ஆகியவை முடிவுக்கு வந்திருக்கின்றன. இதனால் தான் சந்திப்பு முடிந்து வெளியே வந்ததும் காரில் இருந்தபடியே அங்குள்ள நிருபர்களிடம் முன்பை போல் நான் முகத்தை மூடிக்கொண்டு வரவில்லை என்று சிரித்தபடியே எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார்.
இதனிடையே தேமுதிகவையும் , அதிமுக கூட்டணியில் இணைந்து கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமிடம் அமித்ஷா கருத்து தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து உடனடியாக அமைச்சர் ஒருவர் மூலம் பிரேமலதா விஜயகாந்த் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது என்பதும் முக்கிய தகவலாக பார்க்கப்படுகிறது.
வருகிற 28ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அதற்கு முன்னதாக கூட்டணி கட்சிகளை முடிவு செய்து பிரதமர் மோடி பங்கேற்கும் மேடையில் அனைத்து கூட்டணி தலைவர்களையும் ஒன்றாக நிற்கும்படி ஏற்பாடுகளை செய்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி என்பது உச்சகட்ட தகவலாகும்.



