
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் சார்பில் 73 எம்பிக்கள் கையெழுத்திட்ட நோட்டிஸை மாநிலங்களவை பொதுச் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளனர்.
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் சார்பில் மீண்டும் புதிய நோட்டீஸ் மாநிலங்களவையில் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாகரிகா கோஸ் ஆகியோர் இந்த அறிவிப்பை மாநிலங்களவை பொதுச் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளனர்.
இதுபற்றி ஜெய்ராம் ரமேஷ் பேசியபோது, மாநிலங்களவையில், 73 எதிர்க்கட்சி எம்.பி.க்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்கக் கோரி, ஜனாதிபதிக்கு ஒரு தீர்மானத்தை முன்வைப்பதற்காக, மாநிலங்களவை பொதுச் செயலாளரிடம் ஒரு புதிய தீர்மான அறிவிப்பைச் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்தார். இந்த புதிய தீர்மானத்தை மாநிலங்களவையில் தாக்கல் செய்ய 50 கையொப்பங்கள் தேவை என்ற நிலையில், இந்த அறிவிப்பில் 73 மாநிலங்களவை எம்.பி.க்கள் கையொப்பமிட்டுள்ளனர் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் வழிகாட்டுதல்களின்படி தொடர்ந்து செயல்படுவதற்காக இந்த நபர் பதவியில் நீடிப்பது மிகவும் வெட்கக்கேடானது என்று தெரிவித்தார்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது, ஏப்ரல் 18 ஆம் தேதி பிரதமர் தொலைக்காட்சியில் ஆற்றிய உரை தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.




