Advertisements

புகழ்பெற்ற திருமலா பால் நிலையத்தின் தலைமை கருவூல மேலாளர் மர்ம மரணம்குறித்து தமிழகம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பு நிலவுகிறது . ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் வையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் பொலினேனி. இவருக்கு 37 வயதாகிறது.திருமணம் ஆகி குடும்பத்துடன் சென்னை புழலை அடுத்த பிரிட்டானியா நகர் முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்
அவர் வசிக்கும் மாதவரம் அருகே உள்ள பொன்னியம்மன் மேட்டில் பிரபலமான திருமலா பால் நிறுவனம் அமைந்துள்ளது இந்த நிறுவனத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கருவூல மேலாளராக நவீன் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் திருமலா பால் நிறுவனம் வரவுச் செலவு கணக்குகளைச் சரி பார்த்துத் தணிக்கை செய்தது அப்போது 40 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது .நவீன் தான் அந்தப் பணத்தை கையாடல் செய்ததாகவும் அந்தப் பணத்தை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பரின் வங்கி கணக்குகளுக்கு மாற்றி மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாகத் திருமலாபால் நிறுவனம் சார்பில் கடந்த மாதம் 25ஆம் தேதி கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நவீனை அழைத்து விசாரணை நடத்தியபோது என்மீது நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் நான் பணத்தை திருப்பித் தந்து விடுகிறேன் என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது .இந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு அவர் வீட்டருகே உள்ள குடிசையில் தூக்கில் தொங்கிய நிலையில் நவீன் பிணமாகக் கிடந்தார். இங்குச் சமீபகாலமாக அவர் சொந்தமாக வீடு கட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .தூக்கில் தொங்கியபடி மரணம் அடைந்த நவீனின் இரண்டு கைகளும் பின்பக்கமாகக் கட்டப்பட்டு இருந்தன மேலும் உயரத்தை தாவிப் பிடிக்கும் அளவுக்கு அங்கு வாய்ப்புகள் இல்லை டேபிள் உள்ளிட்ட பொருட்களும் இல்லை எனவே அவர் எப்படி தூக்கிட்டுக் கொண்டாரெனச் சந்தேகம் எழுந்ததால் புழல் போலீசார் இதனைச் சந்தேகம் மரணம் என்று வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பாகச் சம்பவ இடம் அருகே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அங்கு நவீன் பொலிவேணி மட்டும் காரிலிருந்து இறங்கி வருவது பதிவாகி இருக்கிறது எனவே அவர் தற்கொலை தான் செய்து கொண்டுள்ளார் எனவும் போலீசார் முடிவுக்கு வந்தனர் .இதற்கிடையே தனது மரணத்திற்கு முன்பாக நவீன் தனது சகோதரிக்கும் நிறுவன அதிகாரிகளுக்கும் இமெயில் ஒன்றை அனுப்பி இருக்கிறார் .அந்த ஈமெயிலில் எனது தவறை நான் உணர்ந்து விட்டேன் ஏற்கனவே நான் கையாடல் செய்தது 5 கோடி ரூபாய் தான் அதனை நிறுவனத்திடம் திரும்பக் கொடுத்துவிட்டேன். எனது தற்கொலைக்கு நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு உயர் அதிகாரிகளே காரணம் அவர்கள் தான் கையாடல் செய்த பணத்தில் பங்கு கேட்டு மிரட்டினர் அது மட்டும் அல்லாமல் தங்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் போலீசாரிடம் சொல்லிக் கைது செய்வோம் என்று மிரட்டினார்கள் இதனால் தற்கொலை முடிவு எடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்
இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பாகச் சரியாக விசாரணை செய்யவில்லையென மாதவரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார் .நவீன் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் சில சிமெண்ட் மூட்டைகள் இருந்தன அந்த மூட்டைகள் மீது ஏறித் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது .இதற்கிடையே கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜன் விடுமுறையில் சென்றுள்ளார் தற்போது அவரிடமும் திருமலா பால் நிறுவன உயர் அதிகாரிகளிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது கொளத்தூர் காவல் ஆணையர் பாண்டியராஜன் தற்போது அன்றாட பணிகள் எதையும் மேற்கொள்ள வேண்டாமெனத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொளத்தூர் காவல் அதிகாரி பாண்டியராஜன் என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு திருப்பூர் அருகே மதுக்கடைகளை அகற்ற போராடிய பெண்கள்மீது தாக்குதல் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் திசா மித்தல் விசாரணையைத் தொடங்கியுள்ளார் . இதற்கிடையே திருமலா பால் நிறுவனத்தில் காணாமல் போன 40 கோடி ரூபாய் எங்கே போனது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
செய்தி தொகுப்பு : திரு.போஸ்
Advertisements



