தனிக்கட்சி தனிக்கட்சி தான்..முரண்டு பிடிக்கும் பாஜகவின் முன்னாள் தலை..!

Advertisements

டெல்லி தலைமை மீதான கடுப்பில் தான் தேர்தல் பணிகளில் இருந்து காக்கி நிர்வாகி திடீரென விலகி இருப்பதாக தேசிய கட்சி நிர்வாகிகள் முனுமுனுக்க தொடங்கி இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே தனிக் கட்சி தொடங்குவார் என்று பேசப்பட்டு வந்தாலும், தற்போதை சூழலில் அந்த திட்டத்தை ஒத்தி வைத்திருப்பதாகவும் அவரின் வார் ரூம் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

தேசிய கட்சியின் தமிழக பொறுப்புக்கு வந்த பின், தனது இஷ்டப்படி நிர்வாகிகளை ஆட்டி வைத்தவர் முன்னாள் காக்கி நிர்வாகி. கட்சியில் தன்னை தாண்டி வளர்ந்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்த அவருக்கு கடிவாளம் போட சீனியர்கள் பலரும் முயன்றனர். ஆனால் டெல்லி தேசிய தலைமை ஆதரவு இருந்ததால், காக்கி நிர்வாகியின் பேச்சிற்கு யாரும் மறுபேச்சு பேச முடியாமல் இருந்தனர்.

ஆனால் கூட்டணிக்கு வரும் துணிவானவர் போட்ட கண்டிஷனால் டெல்லி தலைமைக்கு வேறு வழி தெரியவில்லை. இதனால் உடனடியாக காக்கி நிர்வாகியை தூக்கியடித்துவிட்டு, தென் மாவட்டத்தைச் சேர்ந்த நயமானவரை பதவிக்கு கொண்டு வந்தது. அன்றைய தினமே கூட்டணியும் உறுதியான பின், காக்கிக்கு ஆதரவாக இருந்த நிர்வாகிகள் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம்கட்டப்பட்டனர்.

அண்மையில் வெளியான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் கூட காக்கி நிர்வாகியின் பெயரோ, அவரின் ஆதரவாளர்கள் பெயரோ இடம்பெறவில்லை. அதேபோல் என்டிஏ பொதுக்கூட்டத்தில் அவருக்கான உரிய மரியாதை அளிக்கப்படவில்லை. இதனிடையே கொங்கு மண்டலத்தை மையமாக வைத்து புதியக் கட்சி தொடங்கப் போவதாகவும் சில தகவல் வெளியாகியது.

காக்கி நிர்வாகியின் பெயரில் ரசிகர் மன்றம் கூட தொடங்கப்பட்டன. இதனால் காக்கி நிர்வாகியும் புதியக் கட்சி தொடங்கலாமா என்று ஆலோசித்ததாக விவரம் அறிந்தவர்கள் பேசத் தொடங்கினர். இப்படியான சூழலில் தான் டெல்லியின் சாணக்கியர் அழைப்பின் பெயரில் 2 முறை டெல்லிக்கு சென்றார் காக்கி நிர்வாகி. அதன்பின் சில கூட்டணி தலைவர்களை மட்டும் சந்தித்திருந்தார்.

ஆனால் கூட்டணி இறுதியான நேரத்தில் கூட காக்கி நிர்வாகி அந்த இடத்தில் இருக்கவில்லை. சென்னையில் கூட்டணி இறுதியான போது, காக்கி நிர்வாகியோ கோவையில் முகாமிட்டிருந்தார். இந்த நிலையில் தேர்தல் நெருங்கிட்ட சூழலில் காக்கி நிர்வாகியின் வசம் 6 தொகுதிகள் ஒப்படைக்கப்பட்டது. அந்த 6 தொகுதிகளையும் தேர்தலுக்கு தயார்ப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

விருகம்பாக்கம், மதுரை தெற்கு, காரைக்குடி, சிங்காநல்லூர் உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால் திடீரென காக்கி நிர்வாகி யூடர்ன் போட்டுள்ளார். தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக தமிழக தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தனது தந்தையின் உடல்நலன் காரணமாக பொறுப்பில் இருந்து விலகுவதாக கூறி பலரையும் வாயை அடைத்திருக்கிறார்.

ஏற்கனவே தமிழக நிர்வாகிகளை ஆலோசனைக்கு டெல்லி அழைத்த போது, திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாக கூறி ஜெகா வாங்கினார். அன்றைய நாளில் மட்டும் 11 திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தற்போது தந்தை உடல்நலன் காரணமாக அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இது தேசிய கட்சி வட்டாரங்களில் சில முனுமுனுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏனென்றால் தலைவர் பதவியில் இருந்து இறக்கிய போதே அவருக்கு டெல்லி தலைமை சில உறுதிகளை கொடுத்திருக்கிறது. ஆனால் இதுவரை அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை என்று புலம்பி இருக்கிறார். இதன் காரணமாக டெல்லி தலைமை மீது காக்கி தரப்பு கடுப்பில் இருப்பதாக தி நகர் கட்சிக்காரர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் என்னதான் டெல்லி தலைமை மீது அதிருப்தியில் இருந்தாலும், காக்கி நிர்வாகி புதியக் கட்சி தொடங்கும் திட்டத்தை பற்றி எந்த பரிசீலனையும் செய்யவில்லை என்று அவரின் வார் ரூம் நிர்வாகிகள் கூறுகின்றனர். தேர்தல் நேரத்தில் காக்கி நிர்வ்காகி பணிகளில் இருந்து விலகி இருப்பது பின்னடைவாகும் என்றும் அவரின் ஆதரவாளர்கள் பேசத் தொடங்கி இருக்கின்றன்ர். இதனால் டெல்லி தலைமை விரைவில் காக்கி நிர்வாகியுடன் பேச்சுவார்த்தை நடக்கும் என்றும் ஒரு தரப்பு கூறுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *