
முன் அனுமதி இல்லாமல் ஊடக விளம்பரங்கள் செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ள வேளையில், சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகும் அரசியல் விளம்பரங்களைக் கட்டுப்படுத்தத் தேர்தல் ஆணையம் புதிய மற்றும் கடுமையான விதிகளை அமல்படுத்தியுள்ளது.
இதன்படி, தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தங்களது அதிகாரப்பூர்வமான எக்ஸ் தளம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளக் கணக்குகளின் விபரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. டிஜிட்டல் யுகத்தில் பொய்ச் செய்திகள் மற்றும் அவதூறுப் பிரச்சாரங்களைத் தடுக்கவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தேர்தல் ஆணையத்தின் முறையான அனுமதிச் சான்று இல்லாமல் எந்தவொரு இணையதளத்திலோ அல்லது சமூக வலைதளப் பக்கங்களிலோ அரசியல் தொடர்பான விளம்பரங்களைப் பதிவிடக் கூடாது என்று கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் போன்ற ஊடகங்களில் விளம்பரம் செய்ய விரும்பும் வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கும் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




