
ஆலத்தூரில் ஓஎம்ஆர் சாலை விரிவாக்கப்பணிக்காக ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்போரூர்: சென்னையிலிருந்து புறநகர் பகுதிகளை இணைக்கும் சாலைகளுள் முக்கியமானது பழைய மாமல்லபுரம் சாலை. இந்தச் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கப் படூர் மற்றும் கேளம்பாக்கம் இடையிலும், காலவாக்கம் மற்றும் ஆலத்தூர் இடையிலும் இரு புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
காலவாக்கத்திலிருந்து ஆலத்தூர் வரை செல்லும் புறவழிச்சாலையின் 90 சதவீத பணிகள் முடிவடைந்து தற்காலிகமாக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தப் புறவழிச்சாலை ஆலத்தூரில் இணையும் இடத்தில் நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றை அகற்ற நெடுஞ்சாலை துறை சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டது.
நோட்டீஸ் அனுப்பி நீண்ட நாட்களாகியும் கடைகள் அகற்றப்படாததால் கடந்த மாதம் ஒரு பகுதியில் இருந்த கடைகள் அகற்றப்பட்டன. மற்றொரு பக்கத்தில் மீதமிருந்த 20க்கும் மேற்பட்ட கடைகள் நேற்று மாலை அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடைகளை நடத்தி வந்தவர்கள் தங்களின் பொருட்களை எடுத்துச் சென்றனர்.
தொடர்ந்து நேற்று மாலை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் பொக்லைன் இயந்திரம்மூலம் அகற்றப்பட்டது. திருப்போரூர் வட்டாட்சியர் பூங்கொடி தலைமையில் வருவாய்த்துறை ஊழியர்கள், நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றத்தை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

