
சென்னை :அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையம்மீது மர்மநபர் பெட்ரோல் குண்டு வீசியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.”இதைவிட மோசமாகச் சட்டம் ஒழுங்கு சீர்கெட முடியாது” என்று ஒவ்வொரு முறையும் நினைப்பதற்குள் அதனினும் மோசமான ஒரு நிகழ்வு இந்த விடியாத் திமுக ஆட்சியில் ஏற்படுகிறது.
காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு சட்டத்தின் மீதும், காவல்துறையின் மீதும் குற்றவாளிகளுக்குத் துளியும் பயமற்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்துள்ளதற்கு மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
மக்கள் பாதுகாப்பு வேண்டிச் செல்லும் காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பற்ற நிலையிருக்கிறது. சீர்கெட்டுள்ள சட்டம் ஒழுங்கைக் காக்க தவறியதால், தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கைக் காத்திடவும், தொழில் முதலீட்டைத் தக்க வைக்கவும் , உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடியாத் திமுக முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

