E. V. Velul: திராவிடத்திற்குள் ஆன்மீகம் உள்ளது!

Advertisements

திராவிட மாடல் ஆட்சியையும் ஆன்மீகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. திராவிடத்திற்குள் தான் ஆன்மீகம் உள்ளது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.  

முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 106 கோடி மதிப்பீட்டில் பழனி – தாராபுரம் இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணியை பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எ.வ. வேலு,  பெண்களைப் படி படி என்று சொன்ன இயக்கம் தான் திராவிட இயக்கம். பெண்களைப் படிக்க வற்புறுத்திய மும்மூர்த்திகள் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர்.

திராவிடத்துக்குள் தான் ஆன்மீகம்:

அந்த மும்மூர்த்திகளின் வடிவில் இருக்கிற தற்போதைய முதலமைச்சர், அவர்களின் கொள்கைகளை வலியுறுத்தும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கி உயர்கல்வி பயில்கிற பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார். திராவிடத்திற்குள் தான் ஆன்மீகம் இருக்கிறது.  திராவிட மாடல் ஆட்சியையும் ஆன்மீகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது” என்று அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.

மார்டன் தியேட்டர்ஸ் விவகாரம்:

இதனிடையே மார்டன் தியேட்டர்ஸ் விவகாரம் குறித்தும் அமைச்சர் எவ வேலு விளக்கம் அளித்துள்ளார். அதாவது சேலத்தில் இருக்கும் பழமைவாய்ந்த மார்டன் தியேட்டர்ஸ் நுழைவு வாயில் முன்பு ‘இந்த இடம் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது. அத்துமீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரிக்கை பேனர் வைத்தனர்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் எவ வேலு, அதிகாரிகள் சாலை விரிவாக்கத்துக்கு சர்வே செய்ததில் அந்த இடம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பது தெரியவந்தாகவும், அதற்காக அதிகாரிகள் எச்சரிக்கை பலகையை வைத்திருப்பதாகவும் விளக்கம் அளித்தார். மேலும், மார்டன் தியேட்டர்ஸ் நுழைவு வாயிலை அரசு பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாகவும், புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ளும் எண்ணம் ஏதும் இல்லை என்றும் அமைச்சர் எவ வேலு தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *