கொட்டும் மழையில் துர்கா ஸ்டாலின் நேர்த்திக்கடன்!

Advertisements

மயிலாடுதுறை:

திருவெண்காடு கோவிலில் கார்த்திகை 3ம் ஞாயிறு அகோரமூர்த்தி அபிஷேகம் நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா உள்ளிட்டோர் கொட்டும் மழையிலும் பால்குடம் எடுத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலம் காசிக்கு இணையாகப் போற்றப்படுகிறது இங்கு மூர்த்தி, அம்பாள், தீர்த்தம், விருட்சம், ஆகமப்படி பூஜை அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது. இத்தலத்தில் சிவபெருமானின் 5 முகங்களில் ஒன்றான அகோர மூர்த்தி மற்றும் நவகிரகங்களில் புதன் பகவான் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

முன்னொரு காலத்தில் மருத்துவாசூரன் என்ற அசுரன் ஈசனிடம் பெற்ற சூலாயுதத்தை கொண்டு தேவர்கள், முனிவர்களை இம்சித்தான். போர் புரிய சென்ற நந்தியை மருத்துவாசூரன் 9 இடங்களில் சூலாயுதத்தால் குத்தி காயமடைய செய்ததால் கோபம் கொண்ட சிவபெருமான் தனது 5 முகங்களில் ஒன்றான அகோர மூர்த்தியாக அசுரனை அழிக்க முற்பட்டபோது அதனைக் கண்டு அஞ்சிய அசுரன் சரணாகதி அடைந்தான். இதனைப் போற்றும் வகையில் கார்த்திகை மூன்றாம் ஞாயிறு அன்று அகோர மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

இவ்வாண்டு கார்த்திகை மாத மூன்றாம் ஞாயிறான நேற்று (டிச.,1) மதியம் அகோர மூர்த்தி சுவாமிக்கு மகா அபிஷேக ஆராதனை நடைபெற்றது. முன்னதாகச் சந்திர தீர்த்தத்திலிருந்து தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள், கொட்டும் மழையிலும் ‘ரெயின் கோட்’ அணிந்தபடி பால்குடம் எடுத்து வந்து அகோர மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *