
கோவை:
கோவையில் புரோட்டா சாப்பிட்ட மருத்துவ கல்லூரி மாணவி கீர்த்தனா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், துடியலூர் அருகே தொப்பம்பட்டி பிரிவு பேர்லேண்ட்ஸ் குடியிருப்பில் வசிப்பவர் தியாகராஜன். இவரது மகள் கீர்த்தனா. இவருக்கு வயது 22. கற்பகம் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படித்து வந்தார். நேற்று இரவு புரோட்டா சாப்பிட்டு படுக்கச்சென்றார்.
இன்று காலையில், கீர்த்தனாவை அவரது பெற்றோர் பார்த்தபோது மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை உடனடியாகப் பெற்றோர் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் கீர்த்தனா செல்லும் வழியில் இறந்தார். துடியலூர் போலீசார் விசாரிக்கின்றனர். நேற்று கீர்த்தனா சாப்பிட்ட புரோட்டா எங்குத் தயார் செய்யப்பட்டது, புரோட்டாவில் ஏதும் கலப்படம் சேர்க்கப்பட்டுள்ளதா எனப் பல கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். புரோட்டா சாப்பிட்ட மருத்துவ மாணவி உயிரிழந்த சம்பவம் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

