
ட்ரோன் மூலம் போதைப் பொருட்கள் கடத்தல்!
அமிர்தசரஸ்: இந்திய – பாகிஸ்தான் எல்லை மாநில பகுதியில் சீன மாடல் ட்ரோன் மற்றும் போதைப் பொருள் மீட்கப்பட்டதாகப் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் தர்ன் தரன் மாவட்டம் கல்சியன் குர்த் பகுதியின் நெல் வயலில், ஆளில்லா விமானம் (ட்ரோன்) ஒன்று கேட்பாரற்று கிடந்தது. தகவலறிந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், சம்பவ இடத்திற்கு சென்று அந்த ட்ரோனை மீட்டனர்.
இதுகுறித்து எல்லைப் பாதுகாப்பு படை வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்திய – பாகிஸ்தான் எல்லை வேலிக்கு முன்புள்ள வயற்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது, குவாட்காப்டர் (சீனாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்), 2.7 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் மீட்கப்பட்டது.
ஆளில்லா விமானம்மூலம் போதைப் பொருட்களைக் கடத்தும் கடத்தல் கும்பலின் கைவரிசையாக இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல் அமிர்தசரஸில் உள்ள ராஜதல் கிராமத்திற்கு அருகில் உள்ள நெல் வயலில் ஒரு ட்ரோன் மற்றும் ஹெராயின் அடங்கிய பாட்டில் மீட்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.


