
அயோத்தி ராமர் கோயிலைத் தாக்குதல் நடத்த திட்டம்!
அயோத்தி ராமர் கோயில், பாஜக மூத்த தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள்மீது தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனவரி 21 முதல் 24ஆம் தேதிக்குள் பிரதமர் மோடியால் அயோத்தி ராமர் கோயில் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில்மீது தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, மிகவும் தேடப்படும் பயங்கரவாதி ஷா நவாஸ் உட்பட மூன்று பயங்கரவாதிகளைக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து அதிர்ச்சியூட்டும் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் தாக்குதல் நடத்த அவர்கள் சதி திட்டம் தீட்டியதாக டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோயில், நெரிசலான சந்தைகள், ரயில் நிலையங்கள் உள்ளிட்டவைகளிலும் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டது தெரியவந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அத்துடன், பாஜக மூத்த தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள்மீது தாக்குதல் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டதாகக் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.


