
இந்தியாவின் தாக்குதலில் இருந்து பாகிஸ்தான் பிரதமரின் உயிரை தானே காப்பாற்றியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வாசிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாற்றினார். அப்போது, அவர் தான் தலையிடாமல் இருந்திருந்தால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் ஏற்பட்டிருக்கும் என்றார். இதனால், பாகிஸ்தானில் மூன்றரைக் கோடி மக்கள் இறந்திருப்பார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார்.
இதில், குறிப்பாகப் பாகிஸ்தான் பிரதமர் இறந்திருப்பார் என்றும் தெரிவித்தார். இதையடுத்து, தனது நிர்வாகம் 9ஆவது போரை முடிவுக்குக் கொண்டு வர மிகவும் கடினமாக உழைத்து வருகிறது என்று கூறினார். பின்னர், ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான போர் பற்றிப் பேசிய அவர், தான் அன்றைய தினத்தில் அதிபராக இருந்திருந்தால் இது ஒருபோதும் நடந்திருக்காது என்று தெரிவித்தார். மேலும், தனது வரிவிதிப்பு அச்சுறுத்தல் காரணமாக அமைதி நிலவுகிறது என்றும் கூறினார்.



