
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் காலமானார்.
80 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பயணித்து வந்தவர் நல்லகண்ணு (101). இவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, பிப்ரவரி 1ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 20 நாட்களாகவே தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல்நிலைக் குறித்து கேட்டறிந்திருந்தனர். இந்நிலையில் இன்று பிற்பகல் 1.55 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.
இவரது மறைவு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, “01.02.2026 அன்று நல்லக்கண்ணு, உடல் நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 24 தினங்களாக சிகிச்சையின் போது அவரது உடல் நிலையில் ஏற்றத்தாழ்வுகள் இருந்து வந்தது.
பல்துறை மருத்துவக்குழு தீவிர சிகிச்சையும், அதிதீவிர கண்காணிப்பையும் தொடர்ந்து வந்தனர். இன்று அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து, அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால், நல்லக்கண்ணு 25.02.2026 அன்று பிற்பகல் 1.55 மணியளவில் நம்மை விட்டு பிரிந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும், உறவினர்களுக்கும் இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. மேலும், அவரது சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவக்குழுக்களுக்கும், தமிழக அரசுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


