
தில்லியின் பெயரை இந்திரப் பிரஸ்தம் என்று மாற்றக் கோரி மத்திய உள்துறை அமைச்சருக்குப் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீன் கண்டேல்வால் கடிதம் எழுதியுள்ளார்.
புராணக் காலத்தில் பாண்டவர்களின் தலைநகராக விளங்கிய இந்திர பிரஸ்தமே இந்நாளைய தில்லி நகரம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தில்லியின் பெயரை இந்திரப் பிரஸ்தம் என்று மாற்ற வேண்டும் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீன் கண்டேல்வால் கோரியுள்ளார். இது குறித்து அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் தில்லி என்னும் பெயர் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்தைத்தான் எதிரொலிப்பதாக உள்ளதாகவும், இந்த நகரத்தின் ஆழமான வரலாற்றை உணர்த்தும் வகையில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நகரத்துக்கு இந்திரப் பிரஸ்தம் என்று பெயர் சூட்டுவதன் மூலம் புதிய இந்தியாவின் தலைநகரை அதன் பழைய பண்பாட்டு அடித்தளத்துடன் இணைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இந்த நகரம் உலகின் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம், பழைமையான பண்பாட்டுப் பாரம்பரியம் ஆகியவற்றின் அடையாளமாக விளங்கும் என்று பிரவீன் கண்டேல்வால் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், தில்லிக்கு இந்திரப் பிரஸ்தம் என்று பெயர் சூட்டினால் அது பண்பாடு, நாகரிகம், உணவுப் பழக்கவழக்கங்கள், மொழி ஆகியவற்றை நேரடியாகக் காட்டும் வகையில் இருக்கும் என்று தெரிவித்தார். அதேபோல் இந்த நகரின் முதன்மையான இடத்தில் பஞ்ச பாண்டவர்களின் சிலைகளை நிறுவ வேண்டும் என்றும் பிரவீன் கண்டேல்வால் வலியுறுத்தியுள்ளார்.


