
ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஓமன் தலையிட்டால் அவர்களைத் தகர்க்க வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக கூறி அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தின. இதன் காரணமாக, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முற்றிலும் மூடியது.
இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை ஓமனுடன் சேர்ந்து கூட்டாக நிர்வகிக்க இருப்பதாக ஈரான் முன்மொழிந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வாஷிங்கடனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசியபோது, சர்வதேச சட்டத்தின்படி ஹார்முஸ் ஜலசந்தியை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்தார். ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிப்பது குறித்த ஈரானின் முன்மொழிவை நிராகரிப்பதாகக் கூறினார்.
இந்த விவகாரத்தில் ஓமன் தலையிட்டால் அவர்களைத் தகர்க்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார். இத்தகைய சூழலில் நட்பு நாடான ஓமனிற்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


