
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வீட்டருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருபோதும் சரணடைய மாட்டேன் என டிரம்ப் கோபமாகத் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தல், நவ., 5ம் தேதி நடக்க உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில், துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் தொடர்பாக நடந்த விவாத நிகழ்ச்சிக்குப் பின், ஜனநாயக கட்சியின் வேட்பாளரான துணை அதிபர் கமலா ஹாரிசின் மவுசு கூடியுள்ளதாக, கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச்சூடு
இந்நிலையில், புளோரிடா மாகாணத்தில் தனது வீட்டில் இருக்கும் கோல்ப் மைதானத்தில் டிரம்ப் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவர் வீட்டிற்கு அருகிலேயே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், கோல்ப் கிளப் அருகே, AK-47 துப்பாக்கியுடன் ஓடுவதை கண்ட ரகசிய போலீஸ் அதிகாரிகள் அவரை மடக்கி கைது செய்தனர். அந்த நபர் 58 வயதான Ryan Wesley Routh என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் எதற்குத் துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
பாதுகாப்பாக இருக்கிறார்!
‘முன்னாள் அதிபர் டிரம்ப் பாதுகாப்பாக இருக்கிறார். இந்தச் சம்பவத்தைக் கொலை முயற்சியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம்’ என மத்திய புலனாய்வுப் பிரிவு (FBI) தெரிவித்தது.
சரணடைய மாட்டேன்
துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் தனது ஆதரவாளர்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனது வீட்டின் அருகில் துப்பாக்கிச்சூடு சத்தங்கள் கேட்டன.
நீங்கள் முதலில் கேட்க வேண்டும் என்று நான் விரும்பினேன்: நான் பாதுகாப்பாகவும் நன்றாகவும் இருக்கிறேன். எதுவும் எனக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது. நான் ஒருபோதும் சரணடைய மாட்டேன்! எனக் கூறியுள்ளார்.
வன்முறைக்கு இடமில்லை!
ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘புளோரிடாவில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வீட்டின் அருகே துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட செய்திகள்குறித்து என அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அவர் பாதுகாப்பாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அமெரிக்காவில் வன்முறைக்கு இடமில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மகிழ்ச்சி
டிரம்பின் போட்டித் துணைவரான ஜே.டி.வான்ஸ் டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அவர், ‘ டிரம்ப் பாதுகாப்பாக இருக்கிறார் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்’ எனச் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
எனக்கு நிம்மதி
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோப்பைடன் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: டிரம்ப் கோல்ப் விளையாடிய பகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்தது தொடர்பாக ஒருவரிடம் விசாரணை நடந்து வருகிறது. டிரம்புக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதது நிம்மதியை தருகிறது. அமெரிக்காவில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை. டிரம்புக்கு தேவையான உரிய பாதுகாப்பு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு பைடன் கூறியுள்ளார்.
கடந்த ஜூலை 13ம் தேதி பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பேசிக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்தபோது தாமஸ் மாத்யூ குரூக்ஸ், 20, துப்பாக்கியால் சுட்டார். காது பகுதியில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக டிரம்ப் உயிர் தப்பினார். தற்போது, டிரம்ப்பை மீண்டும் ஏ.கே., 47 ரக துப்பாக்கியால் 58 வயதான நபர் பலமுறை சுட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



