
நில அபகரிப்பு புகார் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது பரங்கிமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடந்த 2 ஆண்டுகளாக தன்னுடைய சொத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் ராஜேஷ் சோமசுந்தரம் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்திருந்தார். அதில், கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது பரங்கிமலையில் தேர்தல் பணிமனைக்காக கொடுத்த 5 ஆயிரத்து 500 சதுர அடி நிலத்தை திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் திருப்பி தர மறுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அன்பரசனின் உதவியாளர் என்ற பெயரில் ஒருவர் வந்து கேட்டதன் பேரில் அந்த இடம் தரப்பட்டது என்றும் குத்தகை காலம் முடிந்து இடத்தை காலி செய்யாமலும் 2 ஆண்டுகளாக வாடகையும் தராமலும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கடந்த ஜூன் 19 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் அன்பரசன் தன்னை சந்தித்தாகக் கூறியுள்ளார். அப்போது, ஒருவாரத்தில் அந்த நிலத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறும், பணம் கொடுத்து விடுவதாகக் கூறியதாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, தனக்கு அந்த நிலம் தேவைப்படுகிறது என்று உறுதியாக தெரிவித்து விட்டதாகக் கூறியுள்ளார். இது குறித்து பல முறை தொடர்பு கொள்ள முயற்சித்தும், தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தனது நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நில அபகரிப்பு புகார் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், அவரது உதவியாளர் ஜெய்சங்கர் மற்றும் பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் ஆகியோர் மீது பரங்கிமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



