
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் ஒருவரின் தனிப்பட்ட தகவல் முழுவதும் பாதுகாப்பானது என்றும், அதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டுப்பெறவோ, சான்றாகப் பயன்படுத்தவோ, பிற நிறுவனங்களுடன் பகிரவோ முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தலைமைப் பதிவாளரும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையருமான மிருத்யுஞ்சய் குமார் நாராயணன் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின் 15ஆவது பிரிவின்படி, ஒருவரின் தனிப்பட்ட தகவல் முழுவதும் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்தத் தகவலைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டுப்பெறவோ, சான்றாகப் பயன்படுத்தவோ, பிற நிறுவனங்களுடன் பகிரவோ முடியாது என்றும் குறிப்பிட்டார். மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மாநிலங்களும் ஒன்றிய ஆட்சிப்பகுதிகளும் குறிப்பிடத் தக்க பங்காற்றுவதாகவும், இந்தக் களப் பணியை முடிக்க மொத்த அரசு இயந்திரமும் பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.
இதற்கு முன் 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுக்கப்பட்டதாகவும், இது நாட்டின் விடுதலைக்குப் பிந்தைய எட்டாவது கணக்கெடுப்பு என்றும் அவர் தெரிவித்தார். மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு விட்டதாகவும், இன்னும் சில நாட்களில் பல மாநிலங்களில் வீடுகளைப் பட்டியலிடுதல் வீடுகள் பற்றிய கணக்கெடுப்பு தொடங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த முறை தாளில் இல்லாமல் முழுவதும் டிஜிட்டல் முறை கணக்கெடுப்பு நடைபெறும் என்றும் மிருத்யுஞ்சய் குமார் நாராயணன் கூறினார்.



