DMK vs BJP: அனல் பறக்கும் போஸ்டர் யுத்தம்!

Advertisements

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை பாஜக சர்ச்சையாக்கி இருக்கும் நிலையில், இது தொடர்பாக கோவையில் போஸ்டர் யுத்தம் தொடங்கியுள்ளது.  

சனாதனம் என்பது கொசு, மலேரியா போன்று ஒழிக்க வேண்டியது என விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். இது மக்களை ஜாதி ரீதியாக பிளவுபடுத்தி, பல்வேறு வழிகளில் ஒடுக்கும் ஒரு மோசமான முறை என்ற தொனியில் பேசினார். இதனை பாஜக தேசிய அளவில் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளது. இந்து மக்களின் வாழ்க்கை முறையை கொச்சைப்படுத்தும் முறையில் உதயநிதி ஸ்டாலின் பேசிவிட்டதாக சாடி வருகின்றனர். அவரின் இந்த பேச்சுக்கு அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் கடும் எதிர்வினையாற்றி வரும் நிலையில், தமிழ்நாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலையும் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் பேசியதில் எந்த தவறும் இல்லை, என்னுடைய பேச்சை ஒருபோதும் திரும்பப் பெறமாட்டேன் என மீண்டும் ஒருமுறை சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அத்துடன் தன்னுடைய தலைக்கு 10 கோடி ரூபாய் அறிவித்த சாமியாரை கிண்டலடித்த அவர், 10 ரூபாய் கொடுத்தால் நானே சீவிக் கொள்வேன் 10 கோடி ரூபாய் எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஒரு சாமியாரிடம் 10 கோடி ரூபாய் எப்படி வந்தது?, நீ சாமியாரா இல்லை காவிக்குள் ஒளிந்திருக்கும் ரவுடியா? என வினவியுள்ளார். இதுபோன்ற மோசடி சாமியார்களை தான் ஒழிக்க வேண்டும் என்றும் ஆவேசமாக தெரிவித்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்து தமிழ்நாட்டில் இருக்கும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் கோவையில் இது தொடர்பாக போஸ்டர் யுத்தம் தொடங்கியிருக்கிறது. திமுக நிர்வாகி வருவர், உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி ரூபாய் அறிவித்த சாமியாரை நோக்கி கேள்வி எழுப்பும் விதமாக, ‘ போலிச் சாமியாரே 100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம்’என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக சார்பில் ‘ சனாதனம் எங்கள் உயிர் மூச்சு’ என போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. இதனால், கோவையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை இந்திய அளவில் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையிலேயே, சனாதனம் ஒழிப்பு குறித்து அவர் பேசியதை பெரியளவில் பேசுபொருளாக்கி வருகின்றனர். இதனால் விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்டவை குறித்து அதிருப்தியில் இருந்த மக்கள் இப்போது பாஜகவால் ஈஸியாக திசை திருப்பப்பட்டு வருவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *