
குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.இராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழகத்திலுள்ள காங்கிரஸ் – திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மண்ணின் மைந்தரும், மகாராஷ்டிர ஆளுநருமான சிபி இராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராகியுள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்கது எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு தமிழருக்கு கிடைக்கவிருக்கும் பெருமையை அரசியல் எல்லைகளைத் தாண்டி எல்லோரும் ஆதரித்தோம் என்று வரலாற்றில் பேசப்பட்டால், அது ஆரோக்கியமான அரசியலை ஊக்குவிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, கட்சி வேறுபாடுகளைத் தாண்டி, அரசியல் வேறுபாடுகளைக் களைந்து தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் இராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தர வேண்டும் என்று நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

