
திமுகவில் கட்சி பணிகளை சரியாக செய்யாத மாவட்ட செயலாளர்களை நீக்கும் நடவடிக்கையில் கட்சி தலைமை இறங்கி உள்ளது. இதில் முதற்கட்டமாக கோவை மாவட்ட செயலாளர் நீக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளதால் திமுகவில் உள்ள மாட்ட நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகர் மாவட்ட தி.மு.க செயலாளர் மாற்றம் செய்து திமுக தலைமை அறிவித்துள்ளது. கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளராக இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், தி.மு.க தீர்மானக்குழு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய கோவை மாநகர் மாவட்ட செயலாளராக, பீளமேடு பகுதி கழக செயலாளர் துரை செந்தமிழ்ச்செல்வன் நியமனம் செய்து தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
கோவை மண்டலத்தில் திமுக வெற்றி பெற பல்வேறு பணிகளை செய்து வருகிறது. செந்தில்பாலாஜியை வைத்து பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறது. கட்சி பணிகளில் தீவிரமாகவும் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு இருக்கும் சூழலில் கார்த்திக் திடீரென மாற்றப்பட்டது திமுகவிற்கு ல் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. தொடர்ந்து கட்சி பணிகளில் அலட்சியம் காட்டியதால் கார்த்திக்கை நீக்க செந்தில் பாலாஜி பரிந்துரை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
செந்தில் பாலாஜியின் பரிந்துரையின் பேரில் கார்த்திக்கை நீக்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுமட்டுமல்லாமல் சுமார் 10 மாவட்ட செயலாளர்கள் சரியாக பணியாற்றவில்லை என்ற பட்டியலும் தயார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. தொடர்ந்து கட்சி பணிகளில் சுணக்கம் காட்டினால் பலரும் நீக்கப்படலாம் என்றும் திமுக தலைமை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இது மட்டுமல்லாமல் இதனிடையே ஓரணியில் தமிழ்நாடு திட்டத்திலும் கார்த்திக் சரியாக பணியாற்றவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதனடிப்படையில் கோவை மேற்கு மண்டலத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் இது போன்ற களையெடுப்பு தொடங்கியதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கன்வே மேற்கு மண்டலத்தை குறிவைத்து தான் முப்பெரும் விழா நடத்தப்பட்டது. இது முழுக்க முழுக்க செந்தில் பாலாஜியின் ஏற்பாட்டின் பேரில் கரூரில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
2026 ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளை சரியாக செய்யாதவர்களை கண்டறிந்து களையெடுக்கும் பணி தொடங்கி இருப்பதால் பலரும் கலக்கத்தில் உள்ளனர். அதேபோல் சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் திமுகவில் சுறுசுறுப்பாக பணியாற்றும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை செந்தில் பாலாஜி வழங்கி வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.


